கோடையில் நதிகள் வற்றிவிடும்
நதியே அழிந்து போகுமா என்ன ...
மழையினில் மீண்டும் வெள்ளம் வரும்
நதியும் வளைந்து நெளிந்து ஓடும் ..
நாணலும் கரையினில் வளைந்து ஆடும்...!
மேகங்கள் நிலவினை மறைக்கக் கூடும்..
நிலவே அழிந்து போகுமா என்ன..
மேகங்கள் விலகி கரைந்து போகும்
மீண்டும் நிலவு வெளியில் வரும்....
வெள்ளிபோல் குளிர்ச்சியான வெளிச்சமும் தரும்...!
இலையுதிர் காலத்தில் மரம் கிளைகளாய்த் தேயும்...
மரமே அழிந்து போகுமா என்ன
வசந்தத்தில் மீண்டும் இலைகள் வளரும்
மரமும் பசுமையாய் மீண்டும் தளிரும் ...
பூக்களும் பூத்து புன்னகையும் புரியும்....!
வாழ்வினில் துன்பங்கள் வரக் கூடும்...
வாழ்வே முடிந்து போகுமா என்ன...
இன்பங்கள் மீண்டும் திரும்ப வரும்
இனிய வாழ்க்கை அதைத் தொடர்ந்து வரும்
உறவும் நட்பும் உன்னைத் தேடிவரும் .!
உண்மைக் காதலும் அதுபோல -
உலகிற்காக மறைத்து விட்டாலும்
இதயத்தில் சுவடாய்ப் பதிந்திருக்கும்
இறக்கும் வரையினில் நிலைத்திருக்கும்..
எங்கோ ஒரு மூலையில் வாழ்வின் நெருடலாய்.....!