இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஜூலை 26, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.16 !...ஸ்ரீரங்கம்..5 !..!

நான் பெங்களூருவில் பன்னீர் கட்டா ரோட்டில் இரண்டு வருடங்களும், மாஹடி ரோட்டில் ஒரு வருடமும் ஆக மூன்று வருடங்கள் வேலை செய்தேன்.பிறகு பெங்களூரில் ப்ராஜெக்ட் முடிந்து சென்னைக்கு மாற்றலானேன். சென்னையில் அண்ணாசாலையில் நடைபெற்ற ஒரு பிரபலமான கட்டிடத்தின் கட்டுமானத்திலும் அதன் பிறகு வடபழனியில் இப்போது முடியும் தருவாயில் உள்ள ஒரு கட்டிடத்திலுமாக  இரண்டு வருடங்கள் கழித்தேன்.
இந்தநிலையில் பெங்களூர்- பிடுதியில் ஒரு புதிய ப்ராஜெக்ட் கிடைக்கவே ஏற்கெனவே பெங்களூரில் வேலை செய்த காரணத்தால் என்னை பெங்களூருக்கே அனுப்ப நிர்வாகம்  முடிவு செய்தது.எனவே மீண்டும் பெங்களுர் சென்றேன்.நான் ஏற்கெனவே பெங்களூரில் இருந்ததால் முதலில் எனக்கும் எதுவும் தோன்றவில்லை. ஆனால்  பெங்களூர் பிடுதி site சென்றதும் தான் எனக்கு மண்டை காய ஆரம்பித்தது.!பிடுதியிலிருந்து  கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் உள்ளடங்கி இருந்த அந்த site ஒரு பொட்டல் காடு....! ! பஸ் வசதி,கடைகள் ஆட்டோ என எந்த வசதிகளும் இல்லாத ,இப்போது தான் தொழிற்ச்சாலைகள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஒரு INDUSTRIAL ஏரியா!நம்ம தமிழ் நாட்டின் சிப்காட் ஏரியா  போல...பிடுதியிலிருந்து எங்களை ஒரு ஜீப்பின் மூலம் காலையில் கொண்டுவந்து விட்டு விடுவார்கள்.பிறகு இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு  தான்  திரும்ப கூட்டிச் செல்வார்கள்! இடைப் பட்ட நேரத்தில் ஜீப் இருக்காது. வேறு போக்குவரத்திற்கு வழியே இல்லாததால்  ஜீப் மற்ற நேரங்களில்  கம்பெனியின்  வேறுவேலைகளுக்காக வெளியே சென்று இருக்கும். எனவே ஜீப் வரும் வரை காத்திருக்க    வேண்டும். பொட்டல்  காடு என்பதால் கம்பனியின் மெஸ் சாப்பாடும் அவ்வளவு சொல்லிக் கொள்ளும் படி இருக்காது.கிட்டத்தட்ட ஒரு ஜெயில் வாழ்க்கை...!இந்த வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த   ஒரே ஆறுதல் நினைத்தபோது ஞாயிற்றுக் கிழமைகளில் மந்த்ராலயம்  சென்று விடுவது தான்.சென்ற முறை இருந்த பெங்களுர் வாழ்க்கைக்கும்  இப்போதைய பெங்களுர் வாழ்க்கைக்கும் நல்ல வேறுபாட்டை உணர்ந்தேன்.  காட்டில் வாழும் வாழ்க்கை போல இருந்ததால் விரைவிலேயே உடல்  கருத்து எடை குறைந்து மனம் சலிப்புற்றேன்.மேலும் இந்த வாழ்க்கையில்  மனம் ஒப்பவில்லை. 

ஒரு முறை சென்னையிலிருந்து உயர் அதிகாரி ஆய்வுக் கூட்டம் நடத்த வந்த போது  எனது நிலைமையை விளக்கி  மீண்டும் சென்னைக்கே மாற்றல் தருமாறு  வேண்டுகோள் வைத்தேன். ஆனால் இது கம்பனியின் கெளரவ பிரச்சினைக்கு உள்ளான  பிராஜெக்ட் எனவும் விரைந்து முடிக்க என்னைப் போன்ற திறமையான  பொறியாளர்கள் அவசியம் தேவை எனவும் இந்த ப்ராஜெக்ட்  முடிந்ததும் பதவி உயர்வுடன் சென்னைக்கு மாறுதல் தருவதாகவும்  உறுதி கூறினார்.(இட மாற்றம் கேட்க்கும் எல்லோருக்கும் கூறும் அதே பதில் தானோ?!)அதற்குக் காரணம் இருந்தது. எனது பிடுதி ப்ரோஜெக்ட்டின்  மேலாளர் என்னை விடுவிக்க சம்மதம் தரவில்லை ப்ரொஜெக்டின் அனைத்து வேலைகளையும் தொழில் நுட்ப்ப ரீதியாக  நான் நன்கு மனதில் பதித்து வேலையினை முடுக்கி விட்டதால்  .நான் சென்று விட்டால்  வேலையின் வேகம் வெகுவாக பாதிக்கும் என அவர்  நினைத்தார். 
என்றாலும் எனது உடல் நிலை ஒத்துழைக்காததால் என்னால் திறம் பட வேலை செய்ய முடியாததை  உணர்ந்தேன்.மேலிடம் எனது வேண்டுகோளை மறுத்ததால்  மீண்டும் வழக்கம் போல ஸ்ரீ ராகவேந்திரரிடம்  முறையிடலானேன்....

இன்னும் வரும்....

சனி, ஜூலை 21, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை...15 !

 எனக்கு ஸ்ரீ ராகவேந்திரர் கனவில் வந்தது உண்டு.ஆனால் இவருக்கு 

நேரிலேயே காட்சி தந்ததாக கூறுகிறார்.அவரின் அனுபவங்களைப் படிக்க 

உங்களையும் அழைக்கிறேன்...!

 சித்தன் அருள்  - மகான் ராகவேந்திரர் தரிசனம்! 

 (Thursday, 12 April 2012)

மந்திராலயத்தில் மூன்று நாட்கள் தங்க வேண்டும்.  மூன்றாம் நாள் பகலிலோ அல்லது இரவிலோ கனவிலோ அல்லது நனவிலோ ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் கிடைக்கும் என்பது அகஸ்தியரின் அருள் வாக்கு. 

ஆவியைக் காட்டியவர் ஆண்டவனின் அருள்பெற்ற அவதார புருஷரான ராகவேந்திரரையும் காட்ட விரும்பிகிறார் என்பது எனது நினைப்பு.


ஜீவசமாதியின் முன்பு விழுந்து விழுந்து வணங்கினேன். முதல் இரண்டு நாட்கள் ஒன்றுமே நடக்கவில்லை.  நண்பரும் மூன்று நாட்கள் என்னதான் தங்கினார்.  ஒவ்வொரு சமயத்திலும் "என்ன தரிசனம் கிடைத்தது?" என்று கேட்டான்.

என் கண்ணுக்கு, மந்திராலயா கோயிலில் உள்ள அத்தனை பேர்களும் "ஸ்ரீ ராகவேந்திரர் தான் என்றுதான் தெரிந்தது. அங்கு காணப்பட்ட பெரும்பாலான மனிதர்களின் உருவ மைப்பு, சந்தன கீற்று. மாத்வர் உடை, சிவப்பு நிறம், ஆரஞ்சு நிற உடைகள் அத்தனையும் பார்க்கும் பொழுது ஸ்ரீ ராகவேந்திரர் போல்தான் தோன்றியது.  நல்ல சாப்பாடு, மூன்று வேளை துங்கபத்ராவில் குளியல்.  ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் எட்டு திசைக்கும் பதினெட்டு நமஸ்காரங்களைச் செய்து ராகவேந்திரரின் மூல மந்திரத்தைச் சொல்லிக் கழித்தாயிற்று.

என் கண்ணுக்கு ஸ்ரீ ராகவேந்திரரின் தரிசனம் கிடைக்கவில்லை.  என்னைவிட என் நண்பனுக்கு மிகவும் வருத்தம்.  இன்னும் பத்து மணி நேரம் தான் இருந்தது.  பொழுதும் போகவில்லை.  வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை.

"துங்கபத்ரா நதிக்கு அக்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உண்டு சென்று பார்க்கலாம்" என்று நண்பர் வற்புறுத்த பரிசிலில் கடந்து அக்கரைக்குச் சென்றோம்.  அப்படியாவது சில மணி நேரம் கழியட்டும் என்ற எண்ணம் தான்.

சாதரணமாக முட்டியளவு ஜாலம் தான் இருக்கும்.  நடந்தே சென்று விடலாம்.  ஆனால் ஆங்காங்கே முதலைகள் இருப்பதால் சற்று ஜாக்கிரதையாக நதியைக் கடக்க வேண்டும் என்று எல்லோரும் முதலில் சொன்னார்கள்.

இப்படி ஒரு பயத்தோடு பஞ்ச முக ஆஞ்சநேயரைத் தரிசிக்க போவதை விட பேசாமல் ராகவேந்திரர் ப்ருந்தவனத்திலேயே தங்கிப் பிரார்த்தனை செய்து விடலாம் என்ற என் எண்ணத்தை அடியோடு விரட்டிவிட்டு வலுக்கட்டாயமாக பரிசிலில் அக்கரைக்கு அழைத்து சென்ற நண்பரின் துணிச்சலைப் பாராட்ட வேண்டியதுதான்.

அக்கரையில் இறங்கி அப்படியே ஒரு ஒற்றையடிப் பாதையில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் இருவரைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் அப்போது அந்த இடத்தில் இல்லை.

நேரம் மதியம் மூணு அல்லது மூன்று நாற்பது இருக்கலாம்.  திடீரென்று யாரோ கனைப்பது போல் சப்தம்.  திரும்பி பார்த்தோம்.
அந்த இயற்கையான, ரம்மியமான சூழ்நிலையில், மரம் செடி புஷ்பங்களுக்கு அருகில் ஒரு பன்னிரண்டு வயது பாலகன் சிறு பாறையில் அமர்ந்திருந்தான்.  முகத்தில் தெய்வீகக் களை.  கண்களில் அபாரமான காந்த சக்தி.  செந்நிற மேனி.  எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும் தீர்க்கமான உதடுகள். நெற்றியில் யு வடிவமான சந்தனக் கீற்று.  பாகவதர் "கிராப்" உடம்பில் பட்டும் படாததுமான மெல்லிய பூணூல்.  இடுப்பில் ஆரஞ்சு நிறத்தில் மெல்லிய வேஷ்டியுடன் இருந்தான் அவன்.  எங்கேயோ சினிமாவில் பார்த்தது போல் என் கண்ணுக்குத் தென்பட்டது.


யாருமே இல்லாத அந்த அற்புதமான இயற்கைச் சூழ்நிலையில் ஒரு சிறு பையன் அங்குள்ள மரத்தடியில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.


என்னைப் பார்த்ததும் சிரித்தான்.


நண்பரும் நானும் அந்தச் சிறுவனின் பக்கத்தில் சென்றோம்.


"பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பார்க்கப் போறேளா?" என்றான் சுத்தத் தமிழில்.


"ஆமாம்" என்றேன்.  "இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறாயே, உனக்கு தமிழ்நாடா?" என்றேன்.


"கும்பகோணம் பக்கத்தில்"


"இங்கேயே தங்கிவிட்டாயா?"


"ஆமாம்!"


"கூட யாராவது வந்திருகிரார்களா?  தனியே இங்கிருப்பதால் தான் கேட்டேன்!"


"தனியாகத்தான் இருக்கிறேன்.  கூடப் பிறந்தவர்களோ, பெற்றோரோ யாரும் கடைசி வரை கூட வருவதில்லையே" என்று சொன்னான்.


இதைக் கேட்டதும் எனக்கு மட்டுமல்ல, என் கூட நின்று கொண்டிருந்த நண்பருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.


"இங்கு வேதம் படிக்க வந்திருக்கிறான் போலிருக்கிறது.  அதான் இப்படிப் பேசுகிறான்" என்றார் என் நண்பர்.


"இல்லை.  வேதம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.


இது எனக்கு அதிகப் பிரசன்கித்தனமாகவே இருந்தது.  "வேதம் என்ன அவ்வளவு எளிதா? அதைப் படித்து தர்க்கம் வாதம் செய்ய குறைந்த பட்சம் பதினெட்டு வருஷமாவது ஆகுமே.  இவன் என்ன இப்படிப் போடு போடுகிறான்" என்று நினைத்துக் கொண்டேன்.


"என்ன அளவுக்கு மீறிப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களாக்கும்.  அது சரி. நீங்கள் ராகவேந்திரரைத் தரிசனம் பண்ணியாகிவிட்டதா?" என்றான்.


"ராகவேந்திரரின் ப்ரிந்தாவனத்தை தரிசனம் செய்து விட்டோம்.  இன்றைக்கு ஊருக்குக் கிளம்புகிறோம்" என்றார் நண்பர்.


"நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே" என்று அர்த்த புஷ்டியோடு பார்த்த பொழுது என் உள்மனது ஏதோ உறுத்தியது.


"இவன் பேசுவதையும், கேட்பதையும் பார்த்தால் சாதாரண சின்னப் பையனாகத் தெரியவில்லை.  தன்னைப் பற்றி எதையும் அதிகம் சொல்லாமல், எங்களைப் பற்றியே கேள்வி கேட்கிறான்.  இவனிடம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமகேதர்க்கு?  நான் ராகவேந்திரரைத் தரிசனம் பண்ணினால் என்ன, பண்ணாமல் போனால் இவனுக்கென்ன?  தவிரவும் மந்திரலயத்திர்க்கு வருகிறவர்கள், ராகவேந்திரரை தரிசனம் செய்யாமல் வேறு எதற்கு வருவார்களாம்?"


இப்படி எண்ணி யோசித்தபொழுது நண்பர் என்னைக் கை பிடித்து "வா போகலாம்" என்று கண்ணால் ஜாடை காண்பித்தான்.


"இன்னும் நான் கேட்டதற்குப் பதிலே சொல்ல வில்லையே" என்று அந்தப் பையன் கேட்டது என் காதில் மறுபடியும் மறுபடியும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது.


"சரி வருகிறோம் தம்பி" என்று சொல்லிவிட்டு " சாரி! உன் பெயர் என்னவென்று சொல்லவே இல்லையே" என்று பெயருக்கு கேட்டு வைத்தேன்.


"பாலா ராகவேந்திரன்" என்று பதில் கிடைத்தது.


"என்னது பால ராகவேந்திரனா?"


"ஆமாம்! அங்கே ஜீவ சமாதியில் பெரிய ராகவேந்திரர்.  இங்கே உயிருடன் இருப்பது பால ராகவேந்திரன்" என்று சொல்லிச் சிரித்தான்.


இன்னமும் இவனுக்குக் குறும்புத்தனம் போகவில்லை என்பது தெரிந்தது.


பொதுவாக மாத்வாகுலத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ராகவேந்திரர் என்று பெயர் வைத்துக் கொள்வது வழக்கம்.  அதன்படி இவனும் தன்னைப் பால ராகவேந்திரன் என்று பெயர் வைத்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை என்று விட்டு விட்டேன்.


நண்பர் என்னை மேலும் அவசரப்படுத்தினான்.


"கொஞ்சம் பொறுங்கள்.  நீங்கள் ராகவேந்திர ப்ரிந்தாவனத்தைத் தரிசனம் செய்தாலும் ராகவேந்திரரைத் தரிசனம் செய்யவில்லை.  இதற்கு ராகவேந்திரரின் மூல மந்திரத்தை ஜபம் செய்தால் அவரது தரிசனம் கிடைக்கும், செய்து பாருங்களேன்" என்று கூறி மெதுவாக எழுந்தான்.


எனக்குச் "சுரீர்" என்று உரைத்தது.


அடடா! ராகஹ்வேந்திரரைத் தரிசிக்கும் முன்பு ராகவேந்திரரின் மந்திரமான


"பூஜ்யாய ராகவேந்திராய சத்யா தர்ம ரதாயசா
பஜதாம் கல்ப வ்ரிக்க்ஷாய நமதாம் காமதேனவே!"


இதை மனதிற்குள் தினமும் சொல்லச் சொல்லி அகஸ்தியர் எனக்கு ஆணையிட்டிருந்தார்.


ஆனால் நான் அதை அடியோடு மறந்துவிட்டேன்.


பொதுவாக நாடி பார்க்கும் முன்பு சில மூல மந்திரங்களை அகஸ்தியர் சொல்லி "இதை விடாமல் ஜபித்துக் கொண்டிரு.  இதை உன் மனதிற்குள் ஜெபி. வெளியே தெரியும்படி ஜெபிக்கதே" என்று ரகசியமாகச் சொல்வது உண்டு.


அப்படி நான் ஜெபிக்காமல் மற்றவர்களுக்கு நாடி படித்தால் ஒன்று நாடியில் எந்தச் செய்தியும் வராது, அல்லது ஒன்றுக்குப் பதிலாக வேறொன்று வரும்.  சரியாக அமையாது.


சில சமயம், "இதை உன் மனதிற்குள்ளேயே இருக்கட்டும்.  காரியம் நடக்கும் வரை வெளியே சொல்லாதே என்று சில செய்திகளை முன் கூடியே எனக்குச் சொல்வதும் உண்டு.  இதையும் மீறி நான் அவசரப்பட்டோ அல்லது உற்சாகத்தோடோ  வெளியே சொன்னால் நான் சொல்வதற்கும், நடப்பதற்கும் நேர் எதிர்மறையாக மாறிவிடும்.


இதெல்லாம் ஜீவ நாடியின் சூட்சுமங்கள்.  இருந்தாலும் இதுவே என்னைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவதும் உண்டு.


ராகவேந்திரரின் இந்த மூல மந்திரத்தை அகஸ்தியர் என்னக்குச் சொல்லியும், நான் மறந்து போனதை எப்படி இந்தச் சிறுவன் எனக்கு எடுத்துக் காட்டினான் என்பதுதான் என் மனதில் விழுந்த சம்மட்டி அடி.


நண்பரிடம் சொன்னேன்.


"இந்த சிறுவன் தெய்வீகத் தன்மையுடையவன்.  ராகவேந்திரரின் மூல மந்திரத்தைச் சொல்லச் சொல்கிறான்.  இங்கேயே இவன் கண் முன்னே நாம் இருவரும் அந்த மந்திரத்தைச் சொல்வோம்" என்றேன்.


நண்பரும் தனது அவசரத்தை மறந்துவிட்டு, கொண்டு வந்த பையைக் கீழே வைத்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டான். அந்த ஜபத்தை இருவரும் தொடர்ந்து சொன்னோம்.


சில நிமிடங்கள் கழித்துக் கண்ணைத் திறந்து பார்த்த பொழுது, அந்தப்  பையன் மெல்ல நடந்து கொண்டிருந்தான்.  பத்தடி தூரத்தில் சிறுவனாகத் தோன்றியவன், பதினைந்து அடி தூரத்தில் பகவான் குரு ராகவேந்திரராக என் கண்ணுக்குக் காட்ச்சியளித்துக் கொண்டே சென்றார்.  ஆகாய ஜோதி பூமியில் தவழ்ந்து போவது போல இருந்தது.

உடம்பெல்லாம் புல்லரித்தது.  (உண்மையாகவே இதை தட்டச்சு செய்கிற பொழுது, எனக்குள் ஒரு குளிர்ச்சி பரவி, உடலில் ரோமங்கள் எல்லாம் எழுந்து நிற்க, ஒரு மின்சாரம் என்னுள் பாதம் முதல் தலை வரை ஓடியது உண்மை.  கண்ணை மூடினால் அவர் நடந்து செல்வதும் தெரிகிறது.  ஒன்றும் பேசவே தோன்றவில்லை!)


இதற்கு பிறகு எனக்கு மந்திரமே வாயில் வரவில்லை.  இனம் புரியாத சக்தியினால் பீடிக்கப்பட்டது போல் இருந்தேன்.  தெய்வ தரிசனம் என்பது இதுதானோ? என்று நினைத்து நினைத்து புளங்கிதம் அடைந்தேன்.


இப்படிப்பட்ட அனுபவம் கிடைத்தது என்பது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய புண்ணியம்! (உண்மை).  இதை என் உள்ளுணர்வு இன்றைக்கும் எண்ணி எண்ணி சந்தோஷம் அடைகிறது.


இப்படிப்பட்ட ஒரு பாக்கியத்தை எனக்கருளிய அகத்தியருக்கு நன்றியைச் செலுத்தினேன்.


நான் என் சுய நினைவுக்கு வந்த போது என்னருகில் இருந்த நண்பரைப் பார்த்தேன்.


அவர் இன்னமும் கண்ணை மூடிக் கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தார்.


பத்து நிமிஷம் கழிந்தது.  "அந்தப் பையனை காணவில்லையே" என்று சுற்றும் முற்றும் தேடினார்.


"நண்பா! உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.  நமக்கு காட்ச்சியளித்த அந்தச் சிறுபையன் பால ராகஹ்வேந்திரன் இல்லை.  சாட்சாத் ராகவேந்திர சுவாமிகள் தான்.  மூல மந்திரத்தை நான் ஜெபிக்க மறந்து போனதை ஞாபகபடுத்தி எனக்கு ராகவேந்திரராகத் தரிசனம் கொடுத்து அப்படியே செடி கொடிக்கிடையில் மறைந்தும் போனார்" என்றேன்.


"அப்படியா?"


"அதுமட்டுமில்லை! என் கண்ணில் பாலகனாக தோன்றியவன், பதினைந்து அடி தூரத்தில் வயதான ராகவேந்திரராகக் காட்சியளித்து அப்படியே மறைந்து போனதை நான் உணர்ந்து கொண்டேன்.  உனக்கு எதுவும் தோன்றவில்லையா?" என்று கேட்டேன்.


மகிழம் பூவின் வாசமும், பவள மல்லியின் வாசமும் திடீரென்று எனக்குத் தெரிந்தது.  எப்படி அந்த வாசனை வந்தது என்று யோசித்தேன். அருகில் அதற்குரிய மரமே இல்லை.  எனவே லேசாகக் கண் திறந்து பார்த்த பொழுது அதோ அந்தச் செடி, கொடிக்கிடையில், வயதான முக்காடு போட்ட ஒருவர் மெதுவாகச் சென்று கொண்டிருந்தார்.  அவரது பின்புறம் தெரிந்தது.  மற்ற படி உன் அளவுக்கு பகவான் ராகவேந்திரர் என் கண்ணில் தென்படவில்லை.  எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்றான் என் நண்பன்.


"அப்படிச்சொல்லதே.  உன்னால்தான் எனக்கு ராகவேந்திரர் தரிசனம் இங்குக் கிடைத்திருக்கிறது.  நீதானே பஞ்சமுக அனுமானைத் தரிசனம் செய்யலாம் என்று கூடிக் கொண்டு வந்தாய்.  இல்லையென்றால் ஒன்றுமே கிட்டாமல், சோர்வுடன் ஊர் திரும்பி இருப்போம்" என்றேன்.


"ஆமாம்.  நாம் இரண்டு பெறும் இந்தத் தெய்வீக அனுபவத்தை பெற்று இருக்கிறோமே.  இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா?" என்றான்.


"மற்றவர்கள் நம்பினால் நம்பட்டும்.  நம்பாவிட்டால் போகட்டும்.  உனக்கும் எனக்கும் இந்தத் தரிசனப் பாக்கியம், கிடைத்தது உண்மை தானே?" என்றேன் உற்ச்சாகத்துடன்.



அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது.


கீழே வைத்திருந்த பையை நாங்கள் கையில் எடுக்கும் பொழுது அந்தப் பையின் மீது குங்குமத்தால் பிசைந்து தடவப்பட்டது போன்ற ராகவேந்திரரின் ப்ரிந்தாவனத்தில் கொடுக்கப் படும் மந்திராட்சதையும், ரோஸ் நிறத்தில் சிறு சிறு துண்டுகளாக அல்வா போல் அழகாக வெட்டப்பட்டு கொடுக்கும் இனிப்பும், பூவோடு காணப் பட்டது.


நன்றாக "ஜிப்" வைத்து மூடிக்கொண்டு வந்த எங்கள் இருவரது பையின் மீது இந்த மந்திராட்ச்சதையும் இனிப்பான நைவேத்தியத்தையும், புஷ்பத்தோடு வைத்தவர் யார்?


எங்களைத் தவிர வேறு யாரும் அந்தப் பிற்பகல் பொழுதில் அங்கு இல்லை.


அப்படியானால் சாட்சாத் ராகவேந்திரரின் கருணையில்லாமல், இது நடந்திருக்காதே.  ஆகா! அப்படிஎன்றால் உண்மையில் நாங்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள் தான் என்று ஆனந்த மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் ஆனந்தக் கண்ணீரைச் சொறிந்தோம்.


இதற்குப் பிறகு பஞ்சமுக ஆஞ்சநேயரைத் தரிசிக்கவா, இல்லை இந்த சந்தோஷத்தோடு அக்கரைக்குச் சென்று ஊருக்குத் திரும்பி விடலாமா? என்று ஒரு சந்தோஷ சஞ்சலம் ஏற்பட்டது.


உடனே நண்பர் சொன்னார் " நாம் இங்கு வந்ததே பஞ்ச முக ஆஞ்சநேயரைத் தரிச்க்கத்தான்.  அதை மறந்துவிட்டுப் போவது நல்லதல்ல.  வா போகலாம்" என்று சொல்ல,


ராகவேந்திரர் தரிசனம் கொடுத்த அந்த மண்ணில் புரண்டு புரண்டு விழுந்து அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு தெய்வீகச் சந்தோஷத்தோடு பஞ்ச முக அனுமானை தரிசிக்கக் கிளம்பினோம்.


ஒரு பாறை வடிக்கப்பட்டது போல பஞ்ச முக ஆஞ்சநேயர் கம்பீரமாகத் தரிசனம் கொடுத்தார்.  ஆனந்தமாகத் தரிசனம் செய்தோம்.


அந்த திவ்யமான அனுமன் தரிசனத்தை நல்லபடியாக முடித்துவிட்டுத் திரும்பும் பொழுது அங்குள்ள ஒரு அர்ச்சகர் விறு விறு என்று என்னை நோக்கி வந்தார்.


கை நிறைய அனுமன் பிரசாதத்தை கொடுத்துவிட்டு "நீங்க யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது.  நீங்க "ரணமண்டலம்" சென்று விட்டு ஊருக்குப் போங்கள் என்று எனக்கு சொல்லச் சொல்லி உத்திரவு ஆகியிருக்கிறது" என்றார்.


"ரணமண்டலமா? அது எங்கே இருக்கிறது?" என்று நான் கேட்கும்பொழுது நண்பர் இடை மறித்தார்.


பக்கத்தில் தான் இருக்கிறது.  அங்கு தான் நான் ஆபிஸ் வேலையாக வந்தேன்.  அதற்குள் மறந்துவிட்டதா? என்று கேட்டுவிட்டு "ரணமண்டலத்தில் எங்குச் செல்லவேண்டும்? என்ன பார்க்க வேண்டும்?  எப்பொழுது செல்ல வேண்டும்? என்று கேட்டான்.


"ரண மண்டலத்தில் ஒரு பெரிய மலை இருக்கிறது.  அந்த மலையில் ஏறிவிட்டு வாருங்களேன்" என்று சொன்னாரே தவிர முழுமையாக எதையும் சொல்லவில்லை.


"சரி" என்று பெயருக்கு சொல்லிவிட்டு நண்பருடன் கலந்து ஆலோசித்தேன்.


"எதோ அசரீரி சொன்ன மாதிரி இந்த அர்ச்சகர் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு உத்தரவு போடுகிறார்" என்றவன், "அந்த அர்ச்சகர் முகத்தை பார்த்தாயா?" என்றான்.


"சரியாகப் பார்க்கவில்லை"


"எனகென்னவோ கொஞ்ச நேரத்திற்கு முன்பு பின்புற தரிசனம் கொடுத்த ராகவேந்திரர் எனக்கு இப்போது அர்ச்சகர் ரூபத்தில் முன்புறமாகத் தரிசனம் கொடுத்து அருள்வாக்குச் சொன்னதுபோல் தெரிகிறது" என்றவன் "சரி... சரி!.  நமக்கும் மீறி ஏதோ சில சக்திகள் நம்மை எங்கேயோ கொண்டு செல்கின்றன.  நான் உன்னை ரணமண்டலத்தில் காரில் இறக்கிவிட்டுச் செல்கின்றேன்,  எனக்கு ஆபிசில் வேறு வேலை இருப்பதால் நான் ஊருக்குச் செல்கிறேன்.  நீ ரணமண்டலத்தில் தங்கி மலைக்குச் சென்று வா.  அங்கு ஆஞ்சநேயர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  எனக்கும் சேர்த்து தரிசனம் பண்ணிவிட்டு வா" என்றான் என் நண்பன்.


(நண்பர்களே! இந்த தொகுப்பை தட்டச்சு செய்த பின் என்னுள் என்னவோ இனம் புரியாத மாற்றம்!  அதை சில நாட்கள் இருந்து அனுபவித்த பின் மறுபடியும் சித்தன் அருளில் உங்களை சந்திக்கிறேன்!  அதுவரை விடை கொடுங்கள்!)

நன்றி : திரு .கார்த்திகேயன்  http://siththanarul.blogspot.in/2012/04/68.html

இன்னும் வரும்...

செவ்வாய், ஜூலை 10, 2012

ஸ்ரீரங்கம்....4 !

 வெள்ளித்திருமுத்தம்  பெரிய வீடுக்கும் எழுத்தாளர் சுஜாதா விற்கும் நெருங்கியதொடர்பு உண்டு .அவரது சகோதரர் அந்த வீட்டின் மாப்பிள்ளை..எனவே அந்தவீட்டில் நடக்கும் விஷேஷங்களுக்கு சுஜாதா அவர்கள் வருவதுண்டு.அப்படி ஒரு விசேஷத்திற்கு அவர் வந்த போது அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.விக்ரம் படத்தில் ஒரு ஷாட்   மிகுந்த பிரயத்தனப் பட்டு கமல் எடுத்ததை சிலாகித்துக் கூறினார்.ஒரு தூணின் மேல் புறா உட்காரும் காட்சி அது என நினைக்கிறேன். 

அப்போது அவரது தொடர்கதை " ஆதலினால் காதல் செய்வீர்""குமுதத்தில் முடிவுற்ற நேரம்..அதன் விமரிசனப் பகுதியில்  " கதை கூட்ஸ் வண்டி ஆங்காங்கே நின்று செல்வது போல சில இடங்களில் விறுவிறுப்  பாகவும் சில இடங்களில் மந்தமாகவும் இருந்தது " என நான் எழுதிய விமரிசனம் குமுதத்தில் வெளியாகி இருந்தது..அதை அவரிடம் காட்டினேன்..படித்துப் பாத்தவர் மெல்ல சிரித்தபடி ஓஹோ ,நீதான் ஸ்ரீரங்கம் A .S .முரளியா? உனது பெயரை நிறைய பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன் இன்னும் நிறைய எழுது என்றார்..

அவரது சகோதரர் திரு ராஜகோபாலன் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்..மிகவும் அற்புதமான மனிதர்.. அவரிடம் எந்த சப்ஜெக்ட் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்..அவரிடம் சரித்திரம் பற்றியோ ,ஸ்ரீரங்கம் கோவில் பற்றியோ ,புராணங்கள் பற்றியோ பேசிக் கொண்டே இருக்கலாம்..முன்பெல்லாம்  ஸ்ரீரங்கத்தில் நாம் இருந்தால் அவரிடம் மாலை வேளைகளில் பேசச் சென்றால்  பொழுதை இனிமையாகவும் பயனுள்ளதாகவும்  கழிக்கலாம் என நான் எண்ணியதுண்டு.ஆனால் சில பல காரணங்களால் இப்போது முடியவில்லை.இன்றும் மாலை வேலைகளில் அவர் ஸ்ரீரங்கத்தின் சித்திரை வீதிகளில்  நடை பயிற்சிக்கு வரும்போது அவரைப்  பார்த்து நலம் விசாரிப்பது உண்டு..

திரு ராஜகோபாலன் அவர்கள் மும்பயிலிருந்த நேரம் அது.. அவரது மகன்கள் மாது  மற்றும் அரவிந்தன் இருவரும் ஸ்ரீரங்கத்திற்கு  விடுமுறைக்கு  வந்து விட்டார்கள் என்றால் எங்கள்  வீதி  மேலும் களை  கட்டி விடும்.! தினம் ஏதாவது  ஒரு வீதியுடன் தெரு கிரிக்கெட் மேட்ச் வைத்து விட வேண்டும் அவர்களுக்கு !....தெருவில்  மூன்று சவுக்குக் குச்சிகளை நட்டு கிரிக்கெட் மேட்ச் விளையாட ஆரம்பித்து விடுவோம்..மிகவும் சீரியஸ் ஆன மேட்ச் ஆக அது  இருக்கும்.....!

 அந்த நினைவுகளை 

நினைத்தாலே இனிக்கும்....!

இன்னும் வரும்..... 

வியாழன், ஜூலை 05, 2012

ஸ்ரீரங்கம்...3 !

             சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் வரும் அந்த கீழச் சித்திரை வீதியின் மதிலுக்கு பின்புறம் வெளிப்பக்கம் அமைந்தது எனது அடயவளஞ்சான் வீதி!கிழக்குப் பகுதியில் இருப்பதால் கீழ அடயவளஞ்சான்.ரயில்வே ஸ்டேஷன் ,தேவிடாகீஸ் பஸ் ஸ்டாப் ,பூச்சந்தை காய்கறி மார்க்கெட் போன்று எங்கு செல்ல வேண்டுமானாலும் உள்  பக்கம் சித்திரைவீதி உத்திரை வீதிகளில் உள்ளவர்கள் எங்கள் தெருவின் வழியாகத்தான் செல்ல வேண்டும்!சுஜாதா உட்பட!மேலும் பாய்ஸ் ஹை ஸ்கூல் ,கேள்ஸ் ஹை ஸ்கூல் செல்பவர்களும் எங்கள் வீதி வழியே தான் செல்ல வேண்டும்.போஸ்ட் ஆபீஸ்  கூட எங்கள் தெருவில் தான் இருந்தது!

எனவே ஸ்ரீரங்கத்தில் எங்கள் தெரு ஒரு vip  அந்தஸ்து பெற்ற வீதி.ஸ்ரீரங்கத்தின்  எந்தப் பகுதியில் இருப்பவர்கள் என்றாலும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக எங்கள் தெருவிற்கு வந்தே ஆக வேண்டும்!இதனால் எங்கள் தெருவில் குட்டிச் சுவரின் மேல் உட்கார்ந்து கதை பேசும் எங்கள் வட்டம் பிரபலமானது.வெள்ளித்திருமுத்தம்  பெரிய  வீட்டில் தான் அத்தனை பசங்களும் விளையாடுவோம்.அந்த  வீடு பெரிய கிளப் போல காட்சி அளிக்கும்.அங்கே விளையாடாத விளையாட்டுக்களே கிடையாது.கிரிகெட்,வாலிபால்,சீட்டுக் கட்டு,கேரம் ,செஸ் போன்ற எல்லா விளை யாட்டுகளுக்கும் அங்கே இடம் உண்டு. டெலிவிஷன் வந்த புதிதில் அங்கே அதுவும் வந்து விட்டது.சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் எங்கள் தெரு முழுக்க அங்கே தான் இருக்கும்.

இப்போது அது ஒரு அழகிய நவீன திருமண மண்டபமாக மாறிவிட்டது.அதனைக்  கட்டிய engineer அடியேன் தான்! அந்தப் பழயவீட்டினை இடித்து  தரை மட்டமாக்கிய போது இரண்டு நாட்கள்   எனக்கு சாப்பாடு  தண்ணீர் இறங்க வில்லை. இப்போதும்  சில சமயம்  அந்த திருமண மண்டபத்தின் முன் நின்று  பழைய  நினைவுகளை அசை போடுவதுண்டு....

அந்தப் பழைய நினைவுகளை .....

நினைத்தாலே இனிக்கும்....!


இன்னும் வரும்....