இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், டிசம்பர் 20, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை ....10 !

            நான் வேலூர்  வேலைக்கான கடைசி பில்லையும் போட்டு முடிக்கும்  நேரம் நெருங்கியது. சரியாக எனது உயர் அதிகாரி போன் செய்து அடுத்த ப்ராஜெக்ட் பொள்ளாச்சியில் தயாராக  இருப்பதாகவும் அடுத்த வாரம் வந்து சேர்ந்து விடுமாறும் கூறினார். எனக்கு மீண்டும் அதே நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமில்லை. மனதிற்கு என்னவோ போலிருந்தது. 
       அன்று ஒரு வியாழக்கிழமை.ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் இரும்பேடு என்ற கிராமத்திலிருந்து உள்ள்ளே சுமார் 2 கிலோமீட்டர் சென்றால் ஒரு ராகவேந்திரர் கோவில் வரும். அந்தக் கோவிலுக்கு எனது ஆர்க்காட்டு நண்பர் ஹிமாச்சல் உடன் சென்றேன். எனது நண்பரிடம் எனது எண்ணங்களைக்  கூறி எனக்கு வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். 

       அந்த ராகவேந்திரர் சந்நிதியிலேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தேன்.கோவில் நடை சாற்றப் போவதாக குருக்கள் கூறவும் நானும் எனது நண்பரும் கிளம்பினோம். அங்கிருந்து ஆற்காடு செல்லும் வழியில் திமிரி என்ற ஊரில் வண்டியை நிறுத்திவிட்டு  ஒரு கடையில் டீ சாப்பிடப் போனோம். 

    எனது நண்பரிடம் எனது ஆதங்கத்தை கூறிக் கொண்டே டீ சாப்பிட்டேன். அப்போது எனது போன் ஒலித்தது. எடுத்துப் பேசினேன். சென்னையில் ஒரு நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் எனது பயோ டேட்டா வைப் பார்த்தாதாகவும் அவர்கள் நிறுவனத்திற்கு ஏற்றதாக உள்ளதாகவும் interview  விற்கு வரமுடியுமா என்றும் கேட்டார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எப்போதோ அனுப்பிய application !

      சரி எனக் கூறி என்றைக்கு என்பதனையும் கேட்டுக் கொண்டேன்.என்னோடு எனது நண்பர் ஹிமாச்சல் அவர்களுக்கும் ஆச்சரியம் !இப்போதுதான்  தான் ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டிவிட்டு வருகிறோம்  இன்னும் டீ கூட சாப்பிடவில்லை ,அதற்குள் இப்படி ஒரு செய்தியா ?என்னால் நம்பவே முடியவில்லை என்றார்.என்னாலும் கூடத்தான் நம்பமுடியவில்லை.! 

                   நான் interview விற்கு சென்னை செல்ல வேண்டிய அந்த நாளும் வந்தது..!

  அற்புதங்கள் தொடரும்....

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மனம்.....9 !

           நமது மனம் தானே நம்மை எண்ணி எண்ணி ஏங்கச் செய்கிறது? தரையில் படுத்தால் கட்டில் - மெத்தை இல்லையே என்ற ஏக்கம். நடந்து சென்றால் ஒரு டூ வீலர் கூட இல்லையே என்ற ஏக்கம். நம்மை நிம்மதி இன்றி அலையச் செய்கிறது நமது மனம் ! 

           எனது நண்பர் ஒருவர் என்னிடம் "நான்   மிகவும் நேசித்த ஒரு பெண் ,அவளும் என்னை நேசிப்பதாகக் கூறி கடைசியில் என்னை ஏமாற்றி விட்டாள்.இப்போது வேறு ஒரு பையனை மணந்து கொள்ளப் போகிறாளாம். எனக்கு மனசே சரியில்லை. அவளை மறக்க முடிய வில்லை  தற்கொலை செய்து கொள்ளலாம் போல  இருக்கிறது "என்று என்னிடம் கூறி வருத்தப் பட்டார்..  எனக்கும் நன்றாகத் தெரியும்  அவர்கள் இருவரும் சேர்ந்து பழகியது,சுற்றியது  எல்லாம். அவள் ஈசி யாக மறந்துவிடு என்று சொல்லிவிட்டாள்,ஆனால் இவரால்  மறக்க முடியவில்லை.பாவம்.  
       
    அவரிடம்  நான் கேட்டேன்,"  நீங்கள்  அவளை மிகவும் நேசிக்கிறீர்கள்  அல்லவா? "

"ஆமாம் ."  

"அவள் மீது உயிரையே வைத்திருக்கிறீர்கள்  அல்லவா?"

"ஆமாம்"

 " அப்படியானால் அவள் அல்லவா வருந்த வேண்டும்? நீங்கள் ஏன்    தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? உன் போல தன மீது உயிரையே வைத்திருக்கும் ஒருவரை  வேண்டாம் என்றால் அது அவளுக்கு அல்லவா நஷ்டம்? நீங்கள்  ஏன் வருத்தப் படுகிறீர்கள் ?இது போல மனநிலை கொண்ட ஒருத்தியை நீங்கள்  மணந்து  கொண்டாலும் உங்களால்  நல்ல வாழ்க்கையை வாழ முடியாது.அவள் உங்களை  மணந்து கொள்ளாததைப் பற்றி பின்னாளில் நிச்சயம் வருந்துவாள்.நீங்கள் உங்கள்  மனதை மாற்றிக் கொள்ளுங்கள் .கொஞ்சம் கஷ்டம்தான்  என்றாலும் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் " என்று கூறி அனுப்பினேன்.
    
   காலத்தின் போக்கில் மனதை மாற்றிக் கொண்ட அவர்,  இன்று வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்.

    மனிதர்கள் பலரும் இது போலத்தான் மற்றவர்களின் நடத்தைகளை  எண்ணி  மனம் வருந்திக் கொண்டிருப்பார்கள்.அல்லது தங்களையும் அதே போன்ற-நேர்மைக்கு மாறான - நடத்தைக்கு மாற்றிக் கொள்வார்கள்!

         நான் மிகவும் மதிக்கும்  நண்பர் ஒருவர் தனக்காக ஒரு கட்டிடம்  எனது மேற்பார்வையில் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார்.அவருக்கு கட்டிடத்  துறையில் அவ்வளவாக யாரையும் பழக்கம் இல்லாத தால் என்னிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். நான் அப்போது வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருந்ததால் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே என்னால்  வந்து பார்க்க முடியும்.எனவே  எனது  நம்பிக்கைக்கு  உரிய, நேர்மையான   கட்டிடப் பொறியாளர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பைத் தந்தேன்.அவர் எனது கல்லூரி கால நண்பரும் கூட. அவர் அங்கிருந்தே அந்தக் கட்டுமான பணிகளை பார்த்துக் கொள்ள நான் விடுமுறை நாட்களில் அவருடன் சேர்ந்து ஆலோசனைகளை செய்து அந்தக் கட்டிடத்தை கட்டிமுடித்தோம்.
          
            மிகவும் நல்லமுறையில் அந்தக் கட்டிடம் முடிந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.  

               ஆனால் பிறகு  எனது நண்பர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் போக்கு முற்றிலும் மாறியது! அவர்களும் எனது பொறியாளர்  நண்பரும் சேர்ந்து தான் அந்தக் கட்டிடத்தைக்  கட்டியது போலவும் எனக்கு அதில் எந்த விதமான தொடர்பும் இல்லாதது போலவும் காட்ட ஆரம்பித்தனர். பின்னாளில் என்னைப் பற்றி யாரோ சிலர் அவர்களிடம் தவறாகக் கூற என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்!

           ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தபோது  என்னை அழைக்காமல் மற்ற அனைவரையும் ,-அந்தப் பொறியாளர் நண்பர் உட்பட- அழைத்து விருந்து வைத்தனர். இதைப் பார்த்த எனது பிற நண்பர்கள் "உன்னைக் கூப்பிடவில்லையா ?அவர்களுக்கு நீ அறிமுகம் செய்து வைத்த  அந்தப் பொறியாளர் கூட  வந்திருந்தாரே, உனக்கு அழைப்பு இல்லையா? .உனக்கு அதில் வருத்தமாக இல்லையா? என்று கேட்டனர்.    

       நான் கூறினேன்."நான் எதற்கு வருத்தப் பட வேண்டும்?என்னைப்  பொறுத்த வரையில் நான் அவர்களுக்கு எந்தத் தீங்கினையும் செய்யவில்லை.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இன்று வரை நினைக்கிறேன் .இன்றும் அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடாத செயலால் அவர்கள் தான் வருத்தப்  பட வேண்டும்.நான் நானாகவே இருக்கிறேன்.அவர்கள்  தான் மாறிவிட்டனர். எனவே கவலைப் பட வேண்டியது அவர்கள் தான்- நான் அல்ல !" என்றேன்.
        
            நிறைய பேர்  இப்படித்தான். அவர் அப்படிச் சொன்னார்.இவர் இப்படிச் சொன்னார் .அவன் மட்டும் அப்படி இருக்கலாமா ?இவன் மட்டும் இப்படிச் செய்யலாமா?நான் மட்டும்  எதற்கு அப்படிச் செய்ய வேண்டும்? எனக்கென்ன தலை எழுத்து?என்று மற்றவர்களின் நடத்தையினைப் பற்றிக் கூறி, நேர்மையிலிருந்து தடம்  மாறி மனசாட்சிப் படி செய்யவேண்டியதைக் கூட செய்யாமால் இருந்து விடுகின்றனர்.

              மற்றவர்களுக்காக நீங்கள் ஏன்  மாற வேண்டும்?உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதன் படி நடந்து கொள்ளுங்கள்.யாருக்காகவும் உங்கள் மனது சொல்லும் நல்லவைகளை செய்யாமால் இருந்து விடாதீர்கள்.

                ரோஜா என்றும் மென்மையாகவே தான் இருக்கிறது.முள் அருகினில்  இருப்பதைப் பார்த்து ரோஜாவும் முள்ளாக மாறி விடுவதில்லை. 

          நீங்களும் நீங்களாகவே இருங்கள். மற்றவர்களைப் பார்த்து நீங்களும்  முள்ளாக மாறவேண்டாம்.!

       மனதை  மாற்றுங்கள் ...... மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!    

   இன்னும் அலசுவேன்....!      

திங்கள், டிசம்பர் 12, 2011

மனம்....8 !

                                     நமது வாழ்க்கையில் நடை பெரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நமது மனம் தானே தீர்மானிக்கிறது.?எப்பொழுதோ நடந்ததை அல்லது யாரோ சொன்னவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன. அவை சரியாகவும்   போகலாம்.தவறாகவும் ஆகலாம்! இந்த விளாயாட்டு தான் வேண்டாம் என்கிறது ஜென். 

                                                     ஜென் மேலும் சொல்கிறது.நீங்கள் எதையும் தீர்மானிக்க வேண்டாம் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுங்கள்.நடப்பவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில் முன்பே தீர்மானிக்கப் பட்டு விட்டவைகளை உங்களால் மாற்ற முடியாது.

                                                     மனதினை லேசாக்கிக் கொள்ளுங்கள்.உங்களால் தீர்மாக்னிக்க முடியாது. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தவைகளுக்கு முன்னுரிமை தர முடியும்.  இது எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படி நடந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று  . இப்படி நினைக்கும் போது முடிவு எதிராக அமைந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்.    
                                                     
                                    முன்னுரிமை தராமல் நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள்  என்றால்  முடிவு எதிராக அமையும் போது நீங்கள் மிகுந்த  ஏமாற்றம் அடைவீர்கள். அந்த ஏமாற்றம் உங்களை விரக்தி  அடையச் செய்யும். அதனால் கோபம் வரும்.கோபத்தின் விளைவுகள் விரும்பத்தகாதவையாக இருக்கும்!
                                   
                                    ஜென் துறவிகளைப் பற்றிக் கூறும் போது இப்படிச் சொல்வார்கள். அவர்கள் படுக்கையில் தான் உறங்குகிறார்கள். முட்களின் மீது படுப்பது இல்லை.ஆனால் படுக்கை கிடைக்காத போது அவர்கள் தரையில் படுத்து உறங்கவும் தயங்குவதில்லை.! 

                                                ஓஷோ அமரிக்காவில் இருந்த போது தினமும் விலைஉயர்ந்த  காரான ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் செல்வாராம்.ஆனால் அவர் நாடு கடத்தப் பட்டு இந்தியாவிற்கு வந்தபோது புனேயில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர்  வெளியில் செல்லும் போது நடந்தே  செல்வாராம். இதை கண்ட வெளிநாட்டு நண்பர் ஒருவர் நீங்கள் அமெரிக்காவில் இருந்த போது விலைஉயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் செல்வீர்கள்.இப்போது நடந்து செல்கிறீர்களே எப்படி உங்களால் முடிகிறது?என்று கேட்டாராம்.அதற்கு ஓஷோ,"அப்போது என்னிடம் கார் இருந்தது அதில் சென்றேன்.இப்போது கார் இல்லை.எனவே நடந்து செல்கிறேன்" என்றாராம்.  
  
                                                            இம்மாதிரியான பக்குவத்தைத் தான் நாம் பெற வேண்டும். இது இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை என ஏற்றுக் கொள்ளும் வகையில் மனதினை இலகுவாக்கிக் கொள்ளுங்கள்.

                                           அப்போது மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!

   இன்னும் அலசுவேன்......
                                                         

சனி, டிசம்பர் 10, 2011

மனம்...7 !

           மனம்... எப்போதும் எண்ணி எண்ணி ஏங்குவது அதன் இயல்பு. இங்கிருந்து பார்த்தால் அந்தப் பக்கம் உள்ளது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது. அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு இங்கிருப்பது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது.ஆனால் எதிலுமே நிலையாக இருப்பதில்லை.
     

                     ஆசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து எடுத்து விடுகிறோம்.இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம். ஆனால் அதன் முடிவு தவறாகிப் போனால் கலங்கிப் போய் விடுகிறோம். எல்லாம் நாமாக உண்டாக்கிக் கொண்டது அல்லவா?.கடைசியில் எல்லாம் விதி என்று அதன் தலையில் போட்டு  விடுகிறோம். இந்த விளையாட்டு எல்லாம் வீண்.ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?இதுவா அல்லது அதுவா? முடிவை விதியின் கையிலேயே தந்து விடுங்கள். நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நடக்கட்டும். நல்லதாக இருந்தாலும் சரி.அல்லாததாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. 


                இவ்வாறு நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்காத போது நடப்பது தான் விதி. எல்லாம் தானாகவே நடக்கட்டும்.எல்லாம் ஏற்கெனவே எழுதப் பட்ட விதி அதை மாற்ற முடியாது. ஒரு சினிமா அல்லது ஒரு டிராமாவைப்  போல.ஏற்கெனவே கதையை எழுதி முடித்தாகி விட்டது ! எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டு விட்டது.முடிவு இப்படித்தான் என்று அதனை எழுதியவருக்குத்தான் தெரியும்.  கதை இப்படிச் செல்ல வேண்டும் என்று நீங்கள் தீர்மானம் செய்வது வீண். எல்லாம் முன்பே எழுதி  முடிக்கப் பட்டு விட்டது. நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.

              நீங்கள் இப்போதுதான் முதன் முதலாக ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். ஆனால் அதற்கான பாதை ஏற்கெனவே போட்டாகிவிட்டது. நீங்கள் அந்தப் பாதையிலேயே செல்லவேண்டியது தான்.அடுத்தடுத்து எந்த ஊர் வரும்?மேடுவருமா,பள்ளம்வருமா? ஆற்றைத் தாண்ட வேண்டுமா? ட்ராபிக் ஜாம் ஆகுமா?எதுவும் தெரியாது.ஆனால் குறிக்கோள் நல்லபடி ஊர் சென்று சேர வேண்டும் என்பது தான். வகுக்கப் பட்ட பாதையை விட்டு வேறு பாதையை தேர்ந்தெடுப்பீர்களா? அப்படித் தேர்ந்தெடுத்தால் அது சரியாகவும் இருக்கலாம்.அல்லது தவறாகியும் போகலாம்.ஆனால் நீங்கள் அந்த ரிஸ்க் ஐ எடுக்க மாட்டீர்கள். ஏற்கெனவே போட்ட பாதை யில் தான் செல்வீர்கள்.

                                     நமது வாழ்க்கையும் அதே போலத்தான்.பிறப்பிலிருந்து இறக்கும் வரைக்கான  ஒவ்வொருவரது பாதையும் போட்டாகி விட்டது. நமது வேலை என்ன? அதில் பயணிப்பது தான்.நடுவில் தடத்தினை மாற்றிக் கொண்டு பிறகு துன்பம் வரும் போது ஏன் விதியின் மீது பழி போட வேண்டும்? இன்பமா வரட்டும்.துன்பமா அதையும் சந்திப்போம்.சண்டையா நடக்கட்டும்.சமாதானமா வந்துவிட்டுப் போகட்டும். நாம் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். வாழ்க்கையை  அதன்போக்கில் விட்டு விடுவோம். ஒரு நதியைப் போல. நதி எதைப்  பற்றியும் கவலைப் படுவதில்லை. அதன் போக்கில் ஓடுகிறது.பள்ளமாக இருந்தாலும் சரி மேடாக இருந்தாலும் சரி.வளைந்து நெளிந்து சென்றாலும் சரி.அதற்கென  வகுக்கப் பட்ட பாதையிலேயே செல்கிறது.கடைசியில் கடலில் கலந்து விடுகிறது.  

            நாமும் அதைப் போல இருப்போம்.வாழ்கையை அதன் போக்கில் விட்டு விடுவோம். இன்பமென்று எதுவும் இல்லை.துன்பம் என்றும் எதுவும் இல்லை.மனம் என்னும் கோப்பையை காலி செய்து விடுவோம்..மனதை வெறுமையாக விட்டு விடுவோம் . எந்த எண்ணங்களும் வேண்டாம்.

                  மனதை மாற்றுங்கள். மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்.!

 இன்னும் அலசுவேன்.....
                     

புதன், டிசம்பர் 07, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....9 !

             வேலூர் அருகில் உள்ள குடியாத்தம் பகுதியை சேர்ந்த இரண்டு நண்பர்கள் .தீவிர ராகவேந்திர சுவாமி பக்தர்கள். அவர்கள் அவ்வப்போது மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திரரை வழி பட்டு வருவார்கள்.

             அவர்கள் எப்போதும்  மந்த்ராலயத்தில்  ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கிவிட்டு சன்னதியின் முன்பு அமர்ந்து  தியானம் செய்வது  வழக்கம்.(நானும் கூட  மந்த்ராலயம் செல்லும் போது  ஸ்ரீராகவேந்திரர் முன்பு அமர்ந்து ராகவேந்திரரை நினைத்து தியானம் செய்வது உண்டு.) அவ்வாறு அவர்கள் ஒருமுறை தியானம் முடித்து எழும் போது இருவருக்குள்ளும் ஒரே எண்ணம் தோன்றியது. அதாவது ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளை எல்லோருக்கும் தெரியப் படுத்தும் வண்ணம் ஏதாவது செய்ய வேண்டும்  என்று.இருவரும் ஊரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்  அவ்வளவு தான்.  
            
                   மந்த்ராலயத்திலிருந்து வந்த அவர்கள் ஸ்ரீராகவேந்திரரின் மகிமைகளை television சீரியலாக எடுத்து வெளியிட வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.   அவர்களே வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடந்தன. சீரியல், சினிமா,ஸ்கிரிப்ட்  என முன் பின் அனுபவங்கள் எதுவும் அவர்களுக்கு  இல்லாமலே ஸ்ரீ ராகவேந்திரரின்  மகிமைகளை உலகிற்குத் தெரியப்  படுத்தும்  வண்ணம் ஒரு நல்ல தொலைக்காட்சித் தொடர் உருவானது.

                ஜெயா தொலைகாட்சி யின் ஜெயா பிளஸ் சானலில்  கிட்டத் தட்ட  50 வாரங்களைக் கடந்து அந்த சீரியல் இன்னமும்   வந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை  7.30  மணிக்கு அந்த நிகழ்ச்சியை நீங்களும் காணலாம்.
                        சீரியல், சினிமா, ஸ்கிரிப்ட்,T V ஸ்லாட் என முன் அனுபவம் எதுவும் இல்லாத அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணத்தை உண்டாக்கி அதை செயல் படுத்துமாறும் செய்தது ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் அன்றி வேறு என்ன?                             
                                                          ------------xx -----------

               வேலூர்-ஆற்காட்டில்  நான் எனது நிறுவனத்திற்காக  அரசாங்க ஒப்பந்த வேலை ஒன்றினை வெற்றிகரமாக செய்து முடித்ததைப் பற்றி எழுதியிருந்தேன். அந்த வேலையினை எங்களது நிறுவனத்திற்காக செய்து கொடுத்தவர்  எங்கள் நிறுவனத்தின்  sub -contrctor ஒருவர். வழக்கமாக எங்கள் நிறுவனம் எடுக்கும் வேலைகளை அவர் தான் ஆட்களை வைத்து முடித்துத் தருவார்.அவரின் பெயர் குப்தா.! பெங்களூரைச் சேர்ந்த அவர்  பின்னாளில் மீண்டும் எனக்கு உதவப் போகிறார் என்று எனக்கு அப்போது தெரியாது......... ! 

அற்புதங்கள் தொடரும்......
                 

திங்கள், டிசம்பர் 05, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....8 !

எனது அனுபவங்களைத் தொடரும் முன் கொஞ்சம் பிறர் அனுபவங்கள்....

""எனது கனவில் கடவுள் வருகிறார். சில சமயங்களில் அவர் என்னோடு பேசுகிற மாதிரி இருக்கிறது. இதெல்லாம் சாத்தியமா?'' -இப்படியொரு கேள்வியை ஆன்மிகப் பெரியவர் ஒருவரிடம் ஒரு பக்தர் கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், ""கடவுள் கனவில் எல்லாம் வரமாட்டார். உங்களோடு பேசுகிறார் என்பது வெறும் மனப்பிரமை. இப்படி எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். பிறகு உங்களை மனநோயாளி என்று சொல்லி, ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள்'' என்று பதிலளித்தார். அவருடைய பதில் எனக்கு வருத்தத்தை அளித்தது. ஏனெனில், வேத- சாஸ்திரங்கள், புராண- இதிகாசங்கள், தர்ம சாஸ்திரம், நீதி சாஸ்திரம் அனைத்தையும் அறிந்தவர் அவர்.

"உங்கள் ஊருக்கு வெளியிலிருக்கும் அரச மரத்தின்கீழ் நான் இருக்கிறேன். என்னை வெளியே எடுத்துக் கோவில் கட்டு' என்று சாதாரண மனிதனின் கனவில் இறைவன் சொல்ல, அப்படியே ஒரு முருகன் சிலையோ, காளி சிலையோ, சிவலிங்கமோ கிடைக்க, அதைப் பிரதிஷ்டை செய்து பல சக்தி வாய்ந்த கோவில்கள் பல ஊர்களில் பல நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டிருக்கும் போது, கடவுள் கனவில் வரமாட்டார் என்று சொல்லுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இறைவன் திருவருளின்றி எதுவுமே நடப்பதில்லை. இது யுகயுகாந்தர மாய் நடந்து வரும் ஒரு விளையாட்டு.


 
அருண் என்று ஒரு பக்தர். இவர் சென்னையை அடுத்த வேளச்சேரியில் வசிக்கிறார். இவர் மந்திராலயம் ஸ்ரீ ராக வேந்திர சுவாமிகளின் தீவிர பக்தர். நேரமும் விடுமுறையும் கிடைக்கும்போதெல்லாம் மந்திராலயம் சென்றுவிடுவார். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக இருக்கும் இவரது கனவில் சுவாமிகள் தோன்றி, தனக்கு ஒரு பிருந்தாவனம் கட்டுமாறு பணித்தார். கனவிலிருந்து விழித்த அருண் திடுக்கிட்டார். சுவாமிகளே நேரில் வந்து சொன்னது மாதிரி இருந்தது அந்தக் கனவு. கனவை நம்பாமலும் இருக்க முடியவில்லை. மிக மிக எளியோனா கிய என்னால் அந்த மகானுக்கு கோவில் கட்ட முடியுமா என்று திகைத்தார். தன் வீட்டி லுள்ளவர்களிடமும் நண்பர்களி டமும் கனவைப் பற்றிச் சொன்னார். பின்னர் அவரே ஒரு முடிவெடுத்தார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேனுபுரீஸ்வரர் என்கிற சிவாலயமும், அதையொட்டி சித்தர்கள் கோவிலும் இருக்கும் ஊர் சித்தர்பாக்கம். இப்போது அதை சித்தாலப்பாக்கம் என்றழைக்கிறார்கள். வேளச்சேரியிலிருந்து மேடவாக் கம் சென்று, அங்கிருந்து மாம்பாக்கம் சாலை வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் பழம் பெரும் கிராமமான சித்தர்பாக்கம் எனும் சித்தாலப்பாக்கத்தை அடையலாம். அந்த சித்தாலப்பாக்கத்தில் சிறிதளவு நிலம் வாங்கி, தன் நண்பர்களுடனும் பக்தர்களுடனும் கோவில் பணிகளைத் தொடங்கி விட்டார் அருண். அவரே எதிர்பாராத விதமாகப் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் நிதி கொடுக்க, பிருந்தாவன வேலைகள் அனைவரும் வியக்கும்படி விரைவாக நடைபெற ஆரம்பித்தது.

மந்திராலயத்திலுள்ள மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகை (மண்) எடுத்து வந்து, அதற்கு 48 நாட்கள் சிறப்புப் பூஜை செய்து, 24-1-2007 அன்று சித்தாலப் பாக்கத்தில் பிருந்தாவனப் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடந்தேறியது. அப்போது கோவில் கோபுர கலசத்தை கருடன் ஒன்று மூன்று முறை வட்டமிட்டுப் பறந்ததை அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மெய்சிலிர்த்தனர். "ஓம் நமோ நாராயணா, ஓம் ஸ்ரீ ராகவேந்திரா' என்று விண்ணதிர முழங்கினர். எல்லா நலன்களையும் ஸ்ரீ ராகவேந்திரர் அனைவருக்கும் காமதேனுவாக இருந்து வழங்குவார் என்பதற்காக இதனை "நல பிருந்தாவனம்' என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

பிருந்தாவனத்தையொட்டி ஸ்ரீ ராகவேந்திரர் ஏழடி உயரத்தில் பவ்ய ஸ்வரூபமாகக் காட்சியளிக்கிறார். சிரசில் பிரஹலாதராக இருந்து வணங்கிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும், மார்பில் ஸ்ரீ ராமரையும் தாங்கி கண்கொள்ளா அழகுடன் காட்சியளிக்கிறார் மகான் ராகவேந்திரர். உடுப்பி பாலிமார் மட சுவாமிகள்

ஸ்ரீ விஞ்ஞானிதி தீர்த்தர் இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்து பூஜைகளை நடத்தி, சித்தாலப்பாக்கத்தை விட்டுப் பிரியவே மனமில்லை என்று வர்ணித்திருக் கிறார். திருவுருவச் சிலையை 48 நாட்கள் ஜலதான்ய வாசம் செய்கையில், ஆறாவது நாளிலிருந்து ஒரு சர்ப்பம் சிலையின்மீது இரவு முழுவதும் இருந்து, பொழுது புலர்ந்ததும் சென்று விடுவது வழக்கமாக இருந்தது என்றும்; 48-ஆவது நாளன்று காணாமல் போன ஆஞ்சனேயர் சிலையைத் தன் உடலில் சுற்றிக் கொண்டு மேலே வந்து அந்த சர்ப்பமே கொடுத்தது என்றும் சொல்லப்படுகிறது.

மந்திராலயத்தில் உள்ளதுபோல் மாஞ்சாலி அம்மனுக்கும் சிலை வைத்து பூஜை நடைபெறுகிறது. ஸ்ரீ ராகவேந்திரர் சில ஆண்டுகள் மதுரையில் இருந்து கல்வி கற்றார். பின்னர் கும்பகோணம் புறப்படும்போது மதுரை மீனாட் சியை விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். அப்போது மீனாட்சியம்மனே அவரிடம், "நீ இருக்கும் இடத்திலெல்லாம் நான் இருப்பேன்' என்று சொன்னதால், மாஞ்சாலியம்மனே மீனாட்சி என்று ஓர் ஐதீகமும் உண்டு. அதனால் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு மடமோ, கோவிலோ அமைக்கும்போது எல்லா ஊர்களிலும்

ஸ்ரீ மீனாட்சியம்மனின் சொரூபமாக மாஞ்சாலியம்மனையும் பிரதிஷ்டை செய்வது வழக்கம். அது சித்தாலப்பாக்கத்தி லும் நடைபெற்றுள்ளது.

2007-ஆம் ஆண்டுவரை வெறும் பொட்டல் காடாகக் காட்சியளித்த சித்தா லப்பாக்கத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் அமைந்த பிறகு எங்கெங்கு காணினும் சிறிய, பெரிய குடியிருப்புகள், அடுக்கு மாடி வீடுகள்! இரண்டு மூன்று வருடங்களில் ஸ்ரீ சுவாமிகள் தன்னருகே அனைவரையும் அழைத்துக் கொண்டு விட்டார் போலும்!

2007-ஆம் ஆண்டு கும்பாபிஷேகத் திற்கும், பிருந்தாவனப் பிரதிஷ்டைக்கும் நாள் குறித்துவிட்ட நிலையில், நிதி நெருக் கடி ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மீண்டும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆதம்பாக்கத்தில் மாதவாச்சார் என்னும் அன்பர் மந்திராலய உண்டியில் போடுவதற்காக பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் உடனடியாக அவரால் மந்திராலயம் செல்ல முடியவில்லை. ஸ்ரீ ராகவேந்திரர் அவர் கனவில் தோன்றி, "நீ மந்திராலயம் வரவேண்டாம். இங்கேயே சித்தாலப்பாக்கத்திற்கு நான் வந்திருக்கிறேன். அதனால் பத்தாயிரம் ரூபாயை அந்தக் கோவிலுக்கு நீ நன்கொடையாக வழங்கு' என்று சொல்ல, மகிழ்ந்து போன மாதவாச்சார் சித்தாலப்பாக்கம் எங்கிருக்கிறது என்று தேடி வந்து, பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாராம்.

ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சித்தாலப் பாக்கம் வந்து தியானம் செய்வதுண்டு. ஒரு நாள் அவர் தியானம் செய்து கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த ஏரியில் ஸ்ரீ சுவாமிகள் ஸ்நானம் செய்துவிட்டு பிருந்தாவனத்துள் நுழைந்ததைப் பார்த்து அதிசயப்பட்டாராம். அனைவரிடமும் ஸ்ரீ ராயரின் அருள் தனக்குக் கிடைத்துவிட்ட தாகச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.

அதேபோல சென்னை துறைமுகப் பொறுப் புக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரமணன் என்பவர் சிறந்த ராகவேந்திர பக்தர். பல ஆண்டுகளாக வியாழக் கிழமைகளில் உணவு ஏதும் அருந்தாமல் ஸ்ரீ ராகவேந்திரரே கதி என்று கிடப்பவர். தாம்பரத்தில் வசிக்கும் இவர் ஒவ்வொரு வியாழனன்றும் திருவல்லிக் கேணி, மாம்பலம் என்று ஏதாவது ஓரிடத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ ராயரை நேரில் சென்று தரிசிப்பது வழக்கம். திடீரென்று அவருக்கு இதய நோய் வந்து அவதிப்பட்டார். அந்த வார வியாழக் கிழமையில் தான் வசிக்கும் தாம்பரத்திற்கு அருகில் ஏதும் கோவிலோ மடமோ இல்லையே என்று வருந்தினார். புதனன்று இரவில் ஸ்ரீ ராயர் அவர் கனவில் தோன்றி, சித்தாலப்பாக்கத்தில் தன்னைக் காண வருமாறு அழைத்தாராம். அப்படிப்பட்ட மகான்தான் ஸ்ரீ ராகவேந்திரர்.

2007-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சித்தாலப் பாக்கம் ஸ்ரீ ராகவேந்திரர்  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ஆராதனை வெகு சிறப்பாக நடைபெறுவதோடு, ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானமும் தன் நண்பர்களின் துணையோடு செய்து வருகிறார் அருண். அதுவும் ஐந்து நாட்கள். அந்த ஐந்து நாட்களிலும் இசைக் கச்சேரிகள், சொற்பொழிவுகள் என்று கோலாகலம். 2008-ஆம் ஆண்டு

ஸ்ரீ ராகவேந்திர சரித்திரமும், 2009-ஆம் ஆண்டு சுந்தர காண்டமும் சொல்லும் வாய்ப்பினையும் புண்ணியத்தையும் எனக்களித்தார் அருண்.

பக்தர்கள் இவ்வாலயம் சென்று ராகவேந்தி ரரின் அருளைப் பெற்றிடுங்கள்.


                                                                                             --  பா.சி. ராமச்சந்திரன்


Name : Santha Kumari Sitharthan Date & Time : 1/5/2011 1:30:34 PM
-----------------------------------------------------------------------------------------------------
நீங்கள் அனுப்பிய இந்த செய்தி மிகவும் அருமை மெய் சிலிர்த்தது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு ஜெய். ப்ளீஸ் சிதலபக்கம் முகவரி & லன்மார்க் கூறவும். நங்கள் 1 முறையாவது சுவாமி தரிசனம் பெற வேண்டும் .எங்களது குறைகளை அவரிடம் கூறி ஆசி பெற வேண்டும்.மிக்க நன்றி .
-----------------------------------------------------------------------------------------------------
Name : gururajan, chengalpet Date & Time : 9/6/2010 9:47:18 AM
-----------------------------------------------------------------------------------------------------
vanakam
-----------------------------------------------------------------------------------------------------
Name : நாகராஜன் பாப்பாரப்பட்டி Date & Time : 8/4/2010 5:23:23 PM
-----------------------------------------------------------------------------------------------------
வணக்கம் அடியேன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சார்ந்தவன்.1935ம் ஆண்டு ராயரின் ப்ருந்தாவன ப்ரதிஷ்டை இவ்வூரில் நடைபெற்றது.அப்போதைய மிட்டாதார் திரு அச்சுத அய்யரின் தம்பி கிருஸ்ணமூர்த்தி ராவ் அவர்கள் தனக்கு ஆண் வாரிசு வேண்டி மந்திராலயத்தில் சேவை புரிந்தபோது "உங்கள் ஊருக்கு நானே வருகிறேன் என்று கனவில் சொன்னதாக உண்மை வரலாறு உள்ளது. மகானின் அருளால் ஆண் குழந்தை பிறந்து கே.குருராவ் என்ற பெயரில் இன்றும் அவர் இங்கு வாழ்ந்து வருகிறார் ராயரின் அருள் பெற்றிட அனைவரையும் பாப்பாரப்பட்டிக்கு வரவேற்கிறேன்
-----------------------------------------------------------------------------------------------------
Name : k.k.gopalswamy Date & Time : 7/25/2010 10:44:24 AM
-----------------------------------------------------------------------------------------------------
என் கனவில் வியாசர் வந்து நல் ஆசி அருளினார், அன்றிலிருந்து நான் வியாசர் பக்தன் ஆகி நாளை (ஜூலை இருபத்தைந்து ) அவருடைய ஜெயந்தி -ஐ ஒரு ஆஸ்ரமத்தில் கொண்டாடபோகிறேன். நான் அவருக்காக ஒரு தியானமண்டபம் கட்டுவதற்கு முழு முயற்சி எடுத்துள்ளேன்.இதைப் பற்றி வுங்கள் மேலான ஆலோசனை தேவை, நன்றி
-----------------------------------------------------------------------------------------------------
Name : Saravanaraju Date & Time : 7/19/2010 1:58:19 PM
-----------------------------------------------------------------------------------------------------
உண்மை, கடவுள் என் கனவில் வந்திருக்கிறார். என் இரண்டவது பையன் பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முதுமாலயம்மன் என் கனவில் வந்து உனக்கு இரண்டவது பையன் என்று சொன்னது. சொன்னபடியே எனக்கு இரண்டவது பையன்தான்.
-----------------------------------------------------------------------------------------------------
 ஆதாரம்  : www . nakkheeran .in  01 .07 .10 

 அற்புதங்கள்    தொடரும்.....

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....7 !

  நான் ராகவேந்திரரை நினைத்து வேண்டிக்கொண்டே வந்தேன். இறங்கியதுமே ஸ்ரீ ராகவேந்திரரைக் கண்டதும் பரவசம் ஆனேன். அந்தக் கடையிலேயே டீ சாப்பிட்டுவிட்டு அந்த அரசாங்க அலுவலகத்திற்கு வழிகேட்டேன். வலதுபுறம் திரும்பினால் முதல் வீடு தான் அந்த அலுவலகம் என்று கூறினார்கள். தேட வேண்டிய வேலை இல்லாமல் சுலபமாக முடிந்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அந்த அலுவலகம் சென்று நான் வந்த காரணத்தைக் கூறினேன். எங்கள் நிறுவனத்தின் ஒப்பந்த  வேலைக்கான பணிகளை செய்யும் பிரிவு மேல் மாடியில் இருப்பதாகக் கூறினார்கள். நான் மேலே சென்று அந்த  வேலைக்கான பொறுப்பு வகிக்கும் பொறியாளரின் அறையின் முன் சென்று நின்றேன்.  அந்த அறையின் முன் வைக்கப்  பட்டிருந்த பெயர்ப் பலகையில்  அந்தப் பொறியாளரின் பெயர் எழுதப் பட்டிருந்தது...

 அவரின் பெயர்....ராகவன்.!..அப்போதே எனக்கு விளங்கிவிட்டது.இந்த ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடியும் என்பது. அதே போல அந்தப் பொறியாளர் எனக்கு சக துணை இல்லாத குறையைப் போக்கி கடைசி வரையில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அந்த ப்ராஜெக்ட் ஐ  குறித்த  காலத்தில் முடிக்க மிகவும் உதவினார் .    

நான் வேலை செய்த அந்த நிறுவனம் குறித்த காலத்தில் வேலையை திறம்பட முடித்து நிலுவையில் ஒரு ருபாய் கூட இல்லாமல் முழு ஒப்பந்தத் தொகையையும் பெற்ற மிகச்சில வேலைகளுள் அதுவும் ஒன்றாக அமைந்தது!

இவ்வாறாக நான் ஒரே ஆளாக தனியாக நின்று அந்த ப்ராஜெக்ட் ஐ வெற்றிகரமாக முடித்தாலும் எனக்கு எனது தலைமை எந்தவிதமான பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ தரவில்லை! அந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் மும்பையில் இருந்தாலும் இங்கே தலைமை ஏற்பவர் தான் இங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை எடுப்பார். எனவே எனது பதவி உயர்வும் சம்பள உயர்வும் அவர்கைகளில் இருந்தும் ஏனோ எனக்கு எதுவும் அவர் செய்யவில்லை. ஆனால் எனக்கு பொள்ளாச்சியில் வேறு ப்ராஜெக்ட் தயாராக இருப்பதாகவும் ,கடைசி பில் ஐ முடித்து விட்டு அங்கு செல்ல  தயாராகும் படியும் எனக்கு தகவல் தரப் பட்டது.

இன்னும் வரும்....

வியாழன், நவம்பர் 24, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....6 !

சில விஷயங்கள் அமானுஷ்யமாக நடக்கும் போது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். நான் எப்போதெல்லாம்  ஸ்ரீ ராகவேந்திரரை மனமுருக  நினைக்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு அமானுஷ்யமாக , எதிர் பாராமல் ஏதாவது நடக்கும். இதை மற்றவர்களிடம் கூறினால் அவர்களுக்கு அதில் ஒன்றும் ஆச்சர்யமாக இருக்காது. போகிற போக்கில் கேட்டுக் கொண்டு போய்விடுவார்கள்! இது எல்லாம் ஒரு விஷயமா என்பது போல!

2004  மற்றும்  2005 ஆண்டுகளில் நான் வேலை செய்த நிறுவனம் அரசாங்க சம்மந்தமான வேலைகளை ஒப்பந்தம் செய்து , முடித்து  கொடுக்கும் நிறுவனம். ஸ்ரீபெரும் புதூரில் நான்கைந்து சக பொறியாளர்களுடன் வேலை செய்த என்னை பதவி உயர்வு என்ற பெயரில்,  ஆர்க்காடு - வேலூரில் வேலைக்கு  அனுப்ப முடிவு செய்தது.

அங்கு எனக்கு துணையாக , உதவியாக வேறு ஒரு பொறியாளரை  வேலையில்  அமர்த்த எனது தலைமை மறுத்து விட்டது.அப்படியானால் நான் ஒருவனே அனைத்து வேலைகளையும் செய்யவேண்டிய  நிர்பந்தம் ஏற்படும் . 

அதுவும் அது அரசாங்க சம்மந்தமான ஒப்பந்த வேலை என்பதால் அரசாங்கத்தின் பொறியாளர்களின் கீழ் ,அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி வேலை செய்ய வேண்டும்.அதனால் நான் அடிக்கடி அந்த பொறியாளர்களின் அலுவலகம் சென்று அவர்களுடன் ஆலோசனை செய்யவேண்டும். அவர்கள் தான் எங்களது வேலைகளை மேற்பார்வை இட்டு ஒப்புதல் தரவேண்டும்.மேலும் அவர்கள் எங்களது வேலைக்கான பில் களை பாஸ் செய்தால் தான் எங்களுக்கு செய்த வேலைகளுக்கான பணம் வரும்.

எனவே  வேலை நடைபெறும்  இடத்தில் வேலைகளை கவனித்து செய்ய வேண்டியதுடன்  அரசாங்க பொறியாளர்களையும்  சந்தித்து வரவேண்டிய பெரும் பொறுப்பும் என் ஒருவன் மீதே விழும்! மேலும் செய்த  வேலைகளுக்கான பில்களை எழுதி பாஸ் செய்ய வைத்து பணம் வாங்கும் வேலையையும் நான் ஒருவனே செய்ய வேண்டும்!

நான் எவ்வளவு கேட்டபோதும்  இன்னொரு பொறியாளரை தர மறுத்துவிட்டது நிர்வாகம்.  

இந்தநிலையில் நான் வேலூர் சென்று அந்த அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்வதற்கான ஆர்டர் ஐப் பெற்று வேலையை  ஆரம்பிக்க என்னை வேலூருக்கு மாற்றியது நிர்வாகம். 

மிகவும் படபடப்புடனும் டெண்ஷனுடனும் வேலூருக்கு பஸ்  ஏறிய நான் மனமுருக ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கினேன். நீதான் என்னுடனே இருந்து இந்த ப்ராஜெக்ட் ஐ  நல்லவித மாக முடித்துத் தரவேண்டும் என வேண்டினேன். 

நான் வேலூரில் உள்ள அந்த அரசாங்க அலுவலகம் செல்ல காந்திநகரில் இறங்கியபோது என்னை வரவேற்றது ஸ்ரீ ராகவேந்திரா பேக்கரி & டீ ஸ்டால் ! பெரிய போர்டில்  ஸ்ரீராகவேந்திரர் காட்சி அளித்துக் கொண்டு புன்னகையுடன் முதன் முதலாக வேலூரில் அடி எடுத்து வைக்கும் என்னை   வரவேற்றார்!!

அற்புதங்கள் தொடரும்...!



















திங்கள், நவம்பர் 21, 2011

மனம்.....6 !

                     வினோதமான மனம் ! எண்ணிப் பாருங்கள், இந்த மனம் எண்ணுகின்ற எண்ணங்களில், அதன் மூலம் செய்யப் படும் செயல்களில் அதிகம் பாதிக்கப் படுவது மற்றவர்களாகத்தான் இருப்பார்கள் ! தங்களுக்குத் தாங்களே பாதிக்கப் படும் படியாக ஒருவரும் நடந்து கொள்ளமாட்டார்கள்! அப்படி நடந்துகொண்டால் அவர்கள் நிச்சயம் மன நலம் பாதிக்கப் பட்டவர்களாகவோ அல்லது பாதிக்கப் படப் போகிரவர்களாகவோ தான் இருப்பார்கள். ஏன் என்றால் யாரும் தங்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் எதையும்  நினைக்கவோ செய்யவோ மாட்டார்கள்.!

        ஏன் இம்மாதிரி எண்ணங்கள் மனதில் உண்டாகிறது?   எல்லாம் முற்காலத்தில் நடந்ததையோ  அல்லது யாரோ அவர்கள் மனதில் விதைத்து விட்டதையோ  மனதில் நிரப்பிக் கொண்டு  விட்டதால் ஏற்ப பட்டது.
   
அம்பிகாபதி படம் நேற்று பார்த்தேன். அம்பிகாபதி, அமராவதி  இருவரையும்  பிரிக்க நினைத்து,அமராவதியின் தந்தையான மன்னனும் மற்றவர்களும்  கடவுளின் மீது 100 பாடல்களை சிற்றின்பம்  சேர்க்காமல் அம்பிகாபதி பாடவேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள்.  கடைசியில்  அமராவதியைப் பார்த்த அம்பிகாபதி 99 பாடல்கள் முடிந்த நிலையிலேயே சிற்றின்பப் பாடலை பாடி விட, அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.அவனுடன் கூடவே அமராவதியும் இறக்கிறாள்.

இதில் என்ன கண்டுவிட்டார்கள் மன்னனும் மற்றவர்களும் ? ஏன் இந்தக் கொடூர எண்ணம்? இருவரையும் வாழவிட்டு அவர்கள் சந்தோஷமாக வாழ்வதைப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அவர்களை இறக்க வைத்து
பார்த்ததில் கிடைத்திருக்குமா?
  
லைலா,,மஜ்னு காதலும் ,சலீம் அனார்கலி காதலும்  கூட இப்படித்தான். மற்றவர்களை துன்பப் படுத்தி காணும் இன்பம் என்ன ஒரு கொடூரமான இன்பம்? ஏன் இவை எல்லாம்? 

இன்று இக் கதைகளைக் கேட்கும் யாரும்" பாவம்  இருவரையும் இணைத்து வைத்திருக்கலாம்" என்றே கூறுவார்கள்! ஆனால் யாரும் தங்கள் வீட்டில் இப்படி ஒரு காதல் கதை உண்டானால் ஏற்க மாட்டார்கள்! ஏன்? மனதில் நிரப்பிக் கொண்ட குப்பை எண்ணங்களே காரணம்!

வாழ்க்கையை ஒரு ஏரியல் பார்வையில் பார்க்கக் கற்றுக்  கொள்ளுங்கள்.
ஒரு ஏரோ பிலேனிளிருந்து கீழே பார்த்தால் எப்படி இருக்கும்? அதே போல நமது வாழ்க்கையில் நடந்ததையும்  மற்றவர் வாழ்க்கையில் நடந்ததையும்  பாருங்கள் !உங்களுக்கே சில நடந்தவை களையும் உங்கள் நடத்தைகளையும் ,  எண்ணங்களையும் பார்க்கும் போது சிரிப்பாகவும் வெட்கமாகவும்,வருத்தமாகவும் ஏன் தான் இப்படி நடந்து கொண்டோமோ என்றும் இருக்கும்! 

மனதில் நிரப்பிக் கொண்டதை கீழே கொட்டுங்கள்.மனதை காலியான கோப்பை ஆக்குங்கள். சிறிது  காலம் கழித்து அந்தக் கோப்பையையும் உடைத்து எறியுங்கள் ! 

மனதை மாற்றுங்கள்..நீங்களும் மகிழ்ச்சியாய் இருங்கள் .மற்றவர்களையும்  மகிழ்ச்சியாய் வைத்திருங்கள்.
 இன்பம் பொங்கும்....என்றும் தங்கும்......!

இன்னும் அலசுவேன் !

செவ்வாய், நவம்பர் 15, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....5 !


மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீதரன்- கங்கா என்று ஒரு தம்பதியர். ஸ்ரீதரன் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருந்தபோது இதய நோய்க்காக "பைபாஸ்' செய்து கொண்டவர். இவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பணிபுரிகிறார் கள். ஸ்ரீதரன்- கங்கா தம்பதியரும் ஸ்ரீராகவேந்திர பக்தர்கள். ஒரு சமயம் ஸ்ரீதரனை வீட்டிலேயே விட்டுவிட்டு கங்காவும் அவருடைய உடன் பிறந்த அண்ணன், தம்பி, அக்காள் என அனைவரும் திருவள்ளூருக்கு அருகிலுள்ள இறைமங்கலம் எனும் கிராமத்திலிருக்கும் ஸ்ரீராக வேந்திர மடத்திற்குச் சென்றுள்ளனர். பூஜை, புனஸ்காரம், அன்னதானம் முடிந்தபோது திருமதி கங்காவிற்கு ஓர் அதிர்ச்சிகரமான தொலைபேசி செய்தி வந்தது.

"வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதரன் திடீரென மயங்கி விழுந்து, உடல் நலம் குன்றி ஆபத்தான நிலையில் இருக்கிறார். ப்ளாட்டில் இருந்தவர்கள் சென்னையின் புகழ் பெற்ற ஒரு மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். உடனே மருத்துவமனைக்கு வரவும்.' -இப்படி செய்தி வந்தவுடன் திருமதி கங்காவும் உறவினர்களும் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவர, ஆபத்தான செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளை சிறிது சிறிதாக செயலிழக்கத் துவங்கிவிட்டதாகவும், உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டுமெனவும் டாக்டர் கள் கூற, எப்படியாவது பிழைத்தால் போதும் என உறவினர்கள் சொல்லிவிட்டனர். மூளை ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தும், சில மணி நேரங்களில் "கோமா' நிலையை அடைந்து விட்டார் ஸ்ரீதரன். எவ்வளவோ முயற்சித்தும் பயனில்லாமல் போய்விட்டது. மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். டெல்லியிலிருந்து கோவை வரை உள்ள உறவினர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். இன்னும் சில மணி நேரங்களிலோ ஓரிரு நாளிலோ ஸ்ரீதரனின் கதை முடிந்துவிடும் நிலை. அப்போதுதான் ஸ்ரீராகவேந்திரரின் அருட்கடாட்சம் கிடைத்தது.


நள்ளிரவில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு முதியவர் நுழைகிறார். இந்த அகால நேரத்தில் ஒரு முதியவர் நுழைவ தைக் கண்ட இரவுப் பணி மருத்துவர்கள் சிலர் தூரத்திலிருந்து ஓடி வருகிறார்கள். அவர்கள் வந்து ஐ.சி.யூ.வின் கதவைத் திறந்து பார்த்தபோது அந்த முதியவரைக் காணவில்லை. ஆனால் கோமா நிலையிலிருந்த ஸ்ரீதரன் எழுந்து உட்கார்ந்திருந்தார். மருத்துவர்கள் வியப்புற்று ஸ்ரீதரனை என்ன நிகழ்ந்தது என்று கேட்க, தன் காதருகே "ஸ்ரீதரா... உனக்கு ஒன்றுமில்லை; எழுந்து உட்கார்' என்று மூன்று முறை யாரோ சொன்னதாகவும்; எழுந்து உட்கார்ந்தபோது வேகமாக ஒரு பெரியவர் வெளியே போனதைப் பார்த்ததாகவும் சொன்னார்.


யார் அந்தப் பெரியவர்? ஸ்ரீதரன்- கங்கா தம்பதியர் வந்தவர் ஸ்ரீராகவேந்திரரே என்று பக்தியுடன் சொல்கிறார்கள். உண்மை... இது சத்தியம்! எண்ணற்ற பக்தர்களின் குறையை நீக்க கல்ப விருக்ஷமாய்- காமதேனுவாய் இருந்து, அதர்மங்கள் பெருகும் இக்கலியுகத்தில் ஸ்ரீராகவேந்திரர் அருள்புரிகிறார் என்பது நிஜம். நாமும் அவரை மனதாரத் துதிப் போமாக!


"பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!'

உண்மைச் சம்பவங்கள்

                          கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகங்களில் நிகழும் அதர்ம காரியங்களை வேரறுப்பதற்காக எம்பெருமான் நாராயணன் ஒவ்வொரு யுகங்களிலும் சில அவதாரங்கள் எடுக்க விரும்பினார். இதை அறிந்த பிரம்ம தேவன், ஸ்ரீமன் நாராயணன் எடுக்கப் போகும் பத்து அவதாரங்கள் என்னவென்று அறிந்து, அந்த அவதாரங்களை மனதில் நினைத்துப் பூஜை செய்ய விரும்பினார். ஆனால் அப்படிப் பூஜை செய்வதற்கான நறுமணமுள்ள மலர்கள் சத்திய லோகத்தில் கிடைப்பது அரிது என்பதால், தன்னுடைய தேவதைகளில் ஒருவரான சங்குகர்ணன் என்பவரை பூலோகத்திற்கு அனுப்பி மல்லிகை, ரோஜா, செம்பருத்தி, பாரிஜாதம், பவளமல்லி, தாழம்பூ போன்ற மலர்களை தினமும் எடுத்து வரப் பணித்தார். சங்குகர்ணனும் தினமும் பூமிக்கு வந்து மலர்களைப் பறித்துச் சென்று பிரம்மா விடம் கொடுத்தார். ஒவ்வொரு யுகத்திலும் நாராயணன் எடுக்கவிருக்கும் மூர்த்தங்களுக்கு ஏற்ப பூஜை செய்து வந்தார் பிரம்மா.

அன்று...


திரேதா யுகத்தில் எடுக்கப்போகும் ஸ்ரீ ராமாவதாரத்திற்கான பூஜை ஆரம்பமானது. ஒவ்வொரு மலராக சங்குகர்ணன் எடுத்து பிரம்மாவிடம் கொடுக்க, பிரம்மா அர்ச்சனை செய்தார். திடீரென்று சங்குகர்ணனிடமிருந்து மலர் வராததைக் கண்ட பிரம்மதேவன் திரும்பிப் பார்த்தார். ஸ்ரீராமனுடைய அழகிலும் கம்பீரத் திலும் தர்மத்திலும் தன் மனதைப் பறிகொடுத்த சங்குகர்ணன் மலர் கொடுப்பதை மறந்து மயங்கி நின்று கொண்டிருந்தார். மலர் தராததால் கோபம் கொண்ட பிரம்மா, ""பூமியில் நீ பிறந்து, எந்த ராமனுடைய பெருமையில் மயங்கினாயோ- அவருடைய அவதாரப் பெருமையை மக்களுக்கு உபதேசித்து மீண்டும் சத்திய லோகத்திற்கு வருவாயாக!'' என்று சபித்தார்.


சங்குகர்ணன் திடுக்கிட்டார். ஆனாலும் பிரம்மனின் சாபமாயிற்றே? அதனால் கிருத யுகத்தில் பிரகலாதனாகப் பிறந்து நரசிம்ம அவதாரத்தையும்; திரேதா யுகத்தில் ஸ்ரீராமனையும் கண்டார். பின்னர் துவாபர யுகத்தில் பாஹ்லீகன் என்கிற அரசனாகப் பிறந்து கிருஷ்ண சேவை செய்து, கடைசியில் இந்தக் கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் குலகுருவான ஸ்ரீ வியாசராஜராகவும், பின்னர் ஸ்ரீராகவேந்திரராகவும் அவதரித்து, பூமியில் பல புண்ணிய காரியங்களைச் செய்து, மக்களை அருள் மார்க்கத்தில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.


ஒருசமயம் ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு வந்த மூன்று பிரபலமான மலையாள ஜோதிடர்கள், அவருடைய ஜாதகத்தை வாங்கி அவருடைய ஆயுள் பாவத்தைக் குறித்துத் தந்தனர். ஒரு ஜோதிடர் சுவாமிகளுடைய ஆயுள் எழுபது ஆண்டுகள் எனவும்; இரண்டாமவர் முந்நூறு ஆண்டுகள் எனவும்; மூன்றாவது ஜோதிடர் எழுநூறு ஆண்டுகள் எனவும் சொல்ல, கூடியிருந்த மக்கள் ஜோதிடர்களைக் கேலி செய்தார்கள்.


""ஒரு மனிதர் முந்நூறு ஆண்டுகளும் எழுநூறு ஆண்டுகளும் உயிர் வாழ முடியுமா?'' என்று அவர்கள் கேட்க, சுவாமிகள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி, மூவரும் சரியாகக் கணித்திருக்கிறார்கள் என்று கூறி, அதற்கு விளக்கமும் அளித்தார்.


அதாவது, தன்னுடைய உடல் இந்த மண்ணில் எழுபது ஆண்டுகள் இருக்கும் என்றும்; ஜீவசமாதி அடைந்து முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனத்தில் இருக்கப் போவதாகவும்; தன்னை உள்ளன்போடு நேசிக்கும் மக்களோடு தான் எழுநூறு ஆண்டுகள் இருக்கப் போவதாகவும்; முடிவாக பிரம்ம லோகம் சென்று சங்குகர்ணனாக இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.


1601-ஆம் ஆண்டு, தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரியில் அவதரித்த சுவாமிகள், 1671-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார். பின்னர் முந்நூறு ஆண்டுகள் -அதாவது 1971-ஆம் ஆண்டு வரை பிருந்தாவனத்தில் இருந்தவாறே தன் பக்தர் களுக்கு அருள்புரிந்தார். பின்னர் 2671-ஆம் ஆண்டு வரை தன் பக்தர்களுக்காக நேரிலேயே வந்து அருள்புரிவார் என்பது ஐதீகம். இதை ஸ்ரீ ராகவேந்திரர் பலமுறை தன் பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். எண்ணற்ற பக்தர்கள் ஸ்ரீ சுவாமிகள் மூலமாகப் பயனடைந்ததைத் தெரிவிக்கின்றனர். அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.


சென்னை திருவல்லிக்கேணியில் ஸ்ரீனிவாஸ்- சரஸ்வதி என்னும் தம்பதியர் ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தர்கள். நான்கு ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு ஐந்தாவதாக ஒரு பெண். செல்லமாய் வளர்ந்த அப்பெண்ணுக்கு பத்து வயது நிரம்பியபோது, பள்ளியிலிருந்து வந்த அவள் காய்ச்சலால் சுருண்டு படுத்து விட்டாள். மருத் துவரிடம் காட்டியும் காய்ச்சல் குணமாக வில்லை. காய்ச்சல் 104 டிகிரி வரை தீவிர மடைந்தது. டைபாய்டு என்று கண்டுபிடித்து மருந்து கொடுக்கத் தொடங்கினார்கள். இரண்டு மூன்று வாரங்கள் சென்றும் நோய் குணமாகவில்லை. மருத்துவமனையில் சேருங்கள் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். ஆனால் அந்தப் பெண் அன்றிரவு கிட்டத்தட்ட "கோமா' நிலையை அடைந்த போது, இனி செய்வதற்கு எதுவுமில்லை என்று மருத்துவர் கைவிரித்து விட்டார். ""இனி உங்கள் பெண்ணை அந்த ராகவேந்திரர்தான் காப்பாற்ற வேண்டும். நாளைய பொழுது உங்களுக்கு நல்லபடியாக விடிய நானும் இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று சொல்லிவிட்டார் மருத்துவர். என்ன செய்வது? ஸ்ரீனிவாஸ்- சரஸ்வதி தம்பதியரும், வீட்டிலிருந்த பிள்ளைகளும் ஸ்ரீராகவேந்திரர் படத்தின்முன் அமர்ந்து அழுதுகொண்டே பிரார்த்தித்தனர். நள்ளிரவு தாண்டியது. அனைவரும் துக்கமாக- அதே சமயத்தில் தூக்க மயமாகவும் இருந்த நேரத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.


கிட்டத்தட்ட கோமா நிலையில் படுத்திருந்த அந்தப் பெண்ணின் தலையருகே, ஜெகஜ்ஜோதி யாய் ஒரு பெரியவர் நின்று கொண்டு அவளின் தலையைத் தொடுகிற மாதிரி ஓர் உணர்வை அந்த ஹாலில் இருந்த அனைவரும் உணர்ந்தனர். சட்டென்று கண்விழித்து எல்லா விளக்குகளை யும் போட்டபோது அவரைக் காணவில்லை. அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் உடல் வியர்வையில் நனைந்திருந்தது. மெதுவாகக் கண்விழித்தாள் அவள். தர்மாமீட்டரில் பார்த்தபோது உடலின் வெப்பம் 98.4 டிகிரி இருந்தது. "குடிக்க ஏதாவது கொடுங்கள்' என்று சைகை செய்தாள். கொடுத்தார்கள். மறுநாள் வந்து பார்த்த மருத்துவர் வியந்தார். இன்று அவள் பெண்ணல்ல; பெண்மணி. கிட்டத்தட்ட ஐம்பது வயதாகும் அந்த அம்மையாருக்கு ஒரு பெண்ணும் பையனும். பெண் மருத்துவராகவும் பையன் நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார் கள். கணவர் தொழிலதிபர். அவர் பெயர் ராக வேந்திரன்!


                                                                          நன்றி:www .sivaraghavendra .com  
அற்புதங்கள் தொடரும்....!

திங்கள், நவம்பர் 14, 2011

மனம்.......5 !

                  சென்ற அத்தியாயத்தில் சொன்னவாறு  பெற்றோருக்கு மட்டும் தான் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதா? இல்லை.பிள்ளைகளுக்கும் அதே போலத்தான். தங்கள் தாய்  தந்தையரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவர்களுக்கும் உள்ளது. பிறர்  என்னசொல்லுவார்களோ என்று நினைத்து அவர்களின் மகிழ்ச்சிக்கு தடை போடும் பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன் . ஏன் இதெல்லாம் வருகிறது.?மற்றவர்கள் சொல்வதை எல்லாம்  மனதில் போட்டு நிரப்பிக் கொண்டு அதில் இருந்து  மீள முடியாமல் போவதால் வருவது இது.

     எனக்குத்தெரிந்து ஒரு 50 வயது நிரம்பியவர் தனது பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்து விட்டார்.மனைவியை இழந்த அவர்  தனி ஆளாக நின்று பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து திருமணமும் செய்து கொடுத்து விட்டார். இப்போது அவர் தனிமையில்.அவர் பிள்ளைகளோ அமரிக்காவிலும் பாம்பே யிலும்  செட்டிலாகிவிட்டார்கள்.இந்த வயதில்  அவருக்கு விவாகரத்து ஆனஒரு பெண்மணியிடம் அன்பு உண்டாக இருவரும் வாழ்க்கையில் இணைய முடிவு எடுத்த போது அவர்களின் பிள்ளைகள் அவரை படுத்தி எடுத்து விட்டனர். இந்த வயதில் உனக்கு இது தேவையா?எங்கள் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள்.?உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? ஊரார் என்ன நினைப்பார்கள்? அப்படி இப்படி என அவரை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். 
        தங்களால் தங்கள் அப்பாவை அடிக்கடி வந்து பார்க்கமுடியாது அப்பாவுக்கு இனி அருகில் யாரும் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்ககமுடிய வில்லை அவர்களால். அவர்களுக்கு தங்கள் தந்தை தனது இறுதிக் காலத்தில் எப்படி இருப்பார் என்ற கவலை துளியும் இல்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வெளி உலகின் பார்வை பற்றித்தான்.   
              ஏன் என்றால் மற்றவர்கள் சொல்வதை எல்லாம் தங்கள் மனதில் அவர்கள் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்.அவர்களுக்கு அதில் இருந்து  மீண்டு வந்து எதார்த்தத்தை பார்க்கும் மனது இல்லை. அதனால் அவர்களுக்கு  தனது தந்தையின் எதிர் காலத்தைப் பற்றி யோசிக்கும் மனநிலை  உண்டாகவில்லை. தங்களது தந்தைக்கு எது நல்லதோ,எது மகிழ்ச்சியோ அதை ஆதரிக்க அவர்களுக்கு மனது ஒப்பவில்லை.
                                     ஒருவர் வயதான காலத்தில் வேறு ஒரு துணை யை நாடுவது தவறு என்றும் வயதான பிள்ளைகள் இருக்க வேறு திருமணம் செய்யக் கூடாது என்றும் வெளி உலகம் கூறிக் கொண்டிருப்பதை தங்கள் மனதில் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்.இப்போது அதை மீறுவதை பெரிய கவுரவக் குறைச்சலாக ஒரு போலியான எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்! 
                     அவர்கள் ஏன் தங்கள் மனதை இவ்வாறு கட்டிப் போட்டுக் கொண்டு விட்டார்கள்? அவர்கள் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆனபின் இப்போது தங்கள் தந்தை யின்  எதிர் காலத்தையும் அவரின் மகிழ்ச்சியையும்  ஏன் கவனத்தில் கொள்ளமுடியவில்லை.? மனம் தான் காரணம்!
               
  போலியான மனக் கட்டுப் பாட்டிலிருந்து வெளியே வாருங்கள்! மற்றவர்களின் மகிழ்ச்சியையும் பாருங்கள் . அவர்களுக்கு வேண்டியதை செய்யுங்கள்.அவர்களின் மகிழ்ச்சியை நீங்களும் பாருங்கள்.அவர்களுடன் அந்த மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்! அதுதான் வாழ்க்கை !
             
எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழத்தானே வாழ்க்கை?
           
மனதை மாற்றுங்கள் ...மகிழ்ச்சி பொங்கும்...இன்பம் தங்கும்...!

இன்னும் அலசுவேன்.....!

ஞாயிறு, நவம்பர் 06, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....4 !

                   லாரன்ஸ் என்றொரு நடனக் கலைஞர் சினிமாவில் எப்படியாவது நுழைந்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தார்.அவ்வப்போது சினிமாவிலும் நடனக் குழுவில் தோன்றியும்,ஒருசில படங்களில்  நடனமாடியும் வந்தார்.
              அவரின் சிறு வயதில்  மிகவும் உடம்பு  முடியாமல்  போய்விட்டது. மூளையில் கட்டி இருப்பதாக டாக்டர்கள் கூற  அவரது தாய்க்கு  இனி அவரது  வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலை  உண்டானது.
                                அப்போது அவரது தாய்க்கு   மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றியும் அவரின் கருணை உள்ளம் பற்றியும்   தெரிய வந்தது.அன்று முதல்  தினமும் ஆழ்ந்த பக்தியுடன் அவரை வணங்கி, லாரன்ஸ்  குணமாக    பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். 
                             
                                       என்ன ஆச்சர்யம்!டாக்டர்களே வியக்கும் வண்ணம் அவர் விரைவிலேயே குணம் ஆனதுடன் நடக்கவும் ஆரம்பித்தார் ! பிறகு  நடனத்தில் தன் கவனத்தை செலுத்தி அற்புதமாக நடனம் ஆடவும் ஆரம்பித்தார். ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கண்களில்  அவர் மாட்ட ,அவர் லாரன்ஸ் நடனத்தைப் பார்த்து வியந்து சினிமாவில் பரிந்துரைத்தார்.

                         மிகவிரைவிலேயே  சினிமாத்துறையில்  சிறந்த நடன அமைப்பாளராக தன் முத்திரையை பதித்து,தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். நடனத்தில் மட்டுமல்ல இன்று அவர் ஒரு வெற்றிகரமான நடிகராகவும்,கதை  ஆசிரியராகவும், வெற்றிப்பட இயக்குனராகவும் தமிழ் படவுலகம் மட்டுமல்லாமல் தெலுங்குப் படவுலகிலும் கொடிகட்டிப் பறக்கிறார்.!

                ஸ்ரீ ராகவேந்திரர் அவரை நடக்கவும் நடனமாடவும் வைத்ததுடன் தனது பக்தன் ரஜினி மூலமாகவே அவருக்கு சினிமா உலகிலும் ஏற்றம் தந்ததை என்னவென்று சொல்ல?
        
                                ஸ்ரீ  ராகவேந்திரர் அருள் பெற்ற அவர் தனது பெயரை ராகவேந்திரா லாரன்ஸ் என்று மாற்றிக் கொண்டதையும் ,ஸ்ரீ ராகவேந்திரருக்கு சென்னையில்  தனது பெரும் முயற்சியிலேயே ஒரு கோவிலையும் கட்டி இருக்கிறார் என்பதனையும் உங்களுக்கு கூறவும் வேண்டுமோ? ! !
  

அருள் பார்வை தொடரும்....!

செவ்வாய், நவம்பர் 01, 2011

மனம் ...4 !

                   சமீபத்தில் ஒரு செய்தி.ஒரு பெண்ணின் தந்தை நல்ல வேலையில் இருப்பவர்.தனது மகள் தனது ஜாதி அல்லாத வேறு ஜாதியைச் சேர்ந்த பையனை திருமணம் செய்ததால் ஆட்களை வைத்து அவரே தனது மருமகனை கொலை செய்து விட்டார். ஏன் என்றால் உலகம் அவரை கேலி செய்யுமாம்.அவரது மானம் மரியாதை எல்லாம் போய் விட்டதாம்.இத்தனைக்கும் பையனும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, நல்ல வேலையில் உள்ள பையன் தான்.ஆனால் ஊர் உலகம் என பயந்து மனம் பேதலித்து விட்டார். இப்போது அவர் மகள் கைம்பெண்,அவர் சிறையில் கொலை காரன் என்ற பட்டத்துடன்,அவர் மனைவி துணை இல்லாமல் தனியாக,பையனின் உறவுகளோ பையனை இழந்த சோகத்தில்.இவ்வளவும் ஏன்?ஊர் உலகத்திற்கு பயந்து தான்.!இப்போது ஊர் உலகத்திற்கு என்ன? அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள்.யாருக்கு நஷ்டம்?


                   ஒரு உண்மையான தந்தை எப்படி இருக்க வேண்டும்? மகளுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்து தரவேண்டும்.தவறான முடிவுகளை எடுத்துச் சொல்லி  புரியவைக்கவேண்டும். நல்லமுடிவுகளை ஆதரிக்க வேண்டும்.இம்மாதிரி காதல் விஷயங்கள் கொஞ்சம் sensitive ஆன பிரச்சினைகள். அதனை நன்கு ஆராய்ந்து  ஒரு முடிவிற்கு வரவேண்டும். நல்ல பையன் நல்ல இடம் என்றிருந்தால் ஜாதி மதம் பார்க்காமல் முன்னின்று எடுத்து  செயல் படுத்த வேண்டும். மகளுக்கோ மகனுக்கோ மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றால் ,அவன்/அவள் கிடைக்கவில்லை என்றால் தான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொல்லும் அளவிற்குப் போய் விட்டால்,மகன்/மகள் வாழ்க்கையையே முதலாவதாகக் கொள்ளவேண்டும்.ஊர் உலகம் மானம் மரியாதை போன்ற தேவை இல்லாத வாதங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு மகன்/மகளின் மகிழ்ச்சியே குறிக்கோளாகக் கொண்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.  அது மட்டுமல்லாமல் பின்னாட்களில் பிரச்சினைகள் வந்தால் நீதானே ஆசைப்பட்டா ய் என்னிடம் ஏன் வருகிறாய் என்று கூறாமல் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.அதுதான் உண்மையான அன்பு, பாசம்!இது மாதிரியான சமயங்களில் மற்றவர் சொல்லுக்கு மனதை அலையவிடாமல் நாம் நமது மகிழ்ச்சி ஒன்றையே பார்க்க வேண்டும். நமக்கு நமது மகிழ்ச்சிதானே முக்கியம்? உலகில் யாரும் கவலையுடனோ துக்கத்துடனோ வாழ விரும்புவதில்லை.ஆக,வெளிஉலகம் சொல்வதைக் கேட்கக் கூடாது-துன்பமும் சோகமும் வரும் என்றால்..வெளிஉலகம் சொல்வதைக் கேளுங்கள் உங்களுக்கு சந்தோஷமும், நிம்மதியும்,இன்பமும் கிடைக்குமென்றால்....!

  இன்னும் அலசுவோம்....!

புதன், அக்டோபர் 19, 2011

அபார்ட்மென்ட்ஸ் உஷார் ...!

சமீபத்தில் ஒரு அபார்ட்மென்ட் இல் வீடு வாங்கச் சென்றேன்..எல்லோரும் ஒரு வரை முறை இல்லாமல் கண்டபடிக்கு விலை சொல்கிறார்கள்.! 

சிவில் என்ஜினீயர் என்ற முறையில் ஒரு அபார்ட்மென்ட் இல் எப்படி விலை நிர்ணயம் செய்யலாம் என ஒரு கைட் லைன் தந்தால் நடுத்தர மக்களுக்கு உபயோகமாக இருக்குமே என்பதற்காக   இந்த வலைப் பதிவு.

1 .U D S எனப் படும் அன் டிவைடெட் ஷேர்  லேன்ட் இன் மதிப்பு. அதாவது ஒரு அபார்ட்மென்ட் உருவாகும் நிலத்தில் கட்டப் படும் வீடுகளுக்கு,மொத்த நிலத்தை தனித்தனியாகப்  பங்கிடாமல்(not separated) மொத்தமாகப் பிரித்து ஒரு வீட்டிற்கு இவ்வளவு நிலம் என(Random ) பகிர்ந்து அளிபபது.

2 . கட்டப் படும் வீட்டின் கட்டுமான செலவு.ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என.

3 .பொது இடங்களின் ( நடை பாதை,ஓவர் ஹெட் டேன்க் , செப்டிக் டேன்க்,காம்பௌன்ட் வால்,டூ  வீலர் பார்கிங்  இன்னபிற )கட்டுமான விலை.(லேன்ட் scape )

4 Approval cost 

5 Architect ,structural எஞ்சினியர் cost .

இப்போது உள்ளே போவோம்.

 1 . UDS லேன்ட் .நீங்கள் வாங்கப் போகும் ஏரியாவில் நிலத்தின் இன்றைய மார்க்கெட்  மதிப்பை விசாரித்து அறியுங்கள்.உதாரணமாக நீங்கள் வாங்கப் போகும் ஏரியாவில் அன்றைய நில மதிப்பு ரூ.1000 ./சதுர அடி  

இப்போது உங்களின்  UDS (கட்டாயம் உங்களின்  பில்டர் கூறுவார்.இல்லை எனில் கேட்டு  அறியுங்கள்.இது உங்களின் பத்திரப் பதிவிலும் குறிப்பிடப் பட வேண்டும்)500  சதுர அடி எனில் 500 x1000 = ரூ.500000 .00 ----(1 )

( பின்னாளில் அபார்ட்மென்ட் கட்டிடம் ஏதாவது ஆனால் இந்த 500 சதுர அடிக்கான மனை விலை தான் உங்களின் சொத்து மதிப்பு... ! )

2 .கட்டுமான மதிப்பு .உங்களின் வீடு 900 சதுர அடி எனில் இன்றைய கட்டுமான விலை ரூ 1400 /சதுர அடி.(லோக்கல் கட்டிட contrator களிடம் விசாரித்து சரியான ரேட் ஐத் தெரிந்து கொள்ளலாம்) ஆக 900x 1400 =ரூ 1260000 .00 ----(2 )

நிற்க.இந்த 900 சதுர அடி என்பதிலும் கோல் மால் உண்டு.! அதைக் கணக்கிட உங்களின் வீட்டின் கார் பெட் ஏரியா வைக் கணகிடுங்கள்.அதாவது உங்கள் வீட்டின் ரூம் களின் அளவை ,பால் கனி உட்பட-சதுர அடியாக நீள,  அகலத்தைப்  பெருக்கி கணக் கிடுங்கள்

.பிறகு சுவர்களுக் காக அத்துடன் பனிரெண்டு பெர்சென்ட் சேருங்கள்.

மீண்டும் நடை பாதை (passage) மற்றும் படிக் கட்டிற்காக 15% சேருங்கள்.இதுதான் உங்கள் வீட்டின் அளவு.இது தோராய மானது. 

விவரமானவர்கள் சுவர்களையும்(உங்கள் வீட்டினுள் அமைந்த சுவர் உங்கள் கணக்கிற்கு மட்டும் )

படி மற்றும் நடைபாதைகளை துல்லியமாக ஒரு floor க்கானதை கணக்கிட்டு அந்த குறிப்பிட்ட floor இல் உள்ள வீடுகளின் எண்ணிக்கையால் வகுத்து உங்களின் பொது ஏரியாவை  கணகிடுங்கள்.

இப்போது வீட்டின் ஏரியா,சுவர்களின் ஏரியா,பொது ஏரியா மூன்றையும் சேருங்கள்.


இது தான் உங்கள் வீட்டின் (வியாபாரத்திற்காண)  ஏரியா.

3 பொது இடங்களின் கட்டுமான விலை.அதாவது லேன்ட் scape ,compound wall  etc 
இது உங்களின் UDS ஏரியா.அதற்கு கட்டுமான விலை (வீட்டின் கட்டுமான விலையில்  மூன்றில் ஒரு பங்கு தோராயமாக .அதாவது 1400 /3 =ரூ 466 
இப்போது 500x 466 = ரூ 233000 ---------(3 ) 

4 அப்ரூவல் cost ரூ 30 முதல் ரூ 50 ஆயிரம் வரை. average ரூ 40000 .00 ------(4 )

5 .Architect ,structural என்ஜினீயர் 5 % construction cost ( 1260000 x 5 %) =ரூ 63000 .00 ---(5)

ஆக மொத்தம் total cost = 1 +2 +3 +4 +5 = ரூ.20 ,96,000 .00 

பொதுவாக இதர வசதிகள் ஏற ஏற விலையும் ஏறிக் கொண்டே போகும்.! எல்லா செலவுகளும் கஸ்டமர் தலையின் மீதே விழும் என்பதனை அறிக.

இது தவிர கோவில் ,children பார்க் இருந்தால்  இவற்றிற்கு மேலே கூறிய படி கணக்கிட்டுக் கொள்ளலாம்.(அனைத்து வீடுகளுக்கும் ஷேர் )

Lift இருந்தால் ஒரு சதுர அடிக்கு ஒரு மாடிக்கு ரூ.10 தோராயமாக.

மற்றும் கார் பார்கிங் (தாராளமாக பார்கைனிங் பண்ணுங்க ! ), கார்பஸ் fund (Flats-Association form செய்ததும் அதன் கணக்கில் டெபொசிட் செய்துவிடவேண்டும்.) etc தகுந்த படி கூட்டிக் கொள்ளுங்கள்.

ஸ்விம்மிங் பூல்,Gym இவற்றிற்கு உறுப்பினர் கட்டணம் உண்டு என்றால்  உஷாராகிக்  கொள்ளுங்கள்! 

வெள்ளி, அக்டோபர் 14, 2011

மனம் 3 ..!

இவ்வாறு மனதை காலிக் கோப்பையாக வைத்திருப்பது சுலபமானது அல்ல தான். ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கின்ற, கேட்கின்ற, பழகுகின்ற விதங்கள் நம்மை விடுவதில்லை.ஒவ்வொன்றும்  ஒவ்வொரு விதமாக நம்மை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.அவற்றிற்கு ஏற்றார்போல நாமும் நமது எண்ணங்களையும் செயல்களையும் மாற்றிக் கொண்டே இருக்கிறோம்.சுருக்கமாகச் சொன்னால் வெளி உலகம் நம்மை ஆட்சி செலுத்துகிறது.

துன்பமும் ,இன்பமும் நம் மனதில்  தான் இருக்கிறது என சில ஞானிகள் சொல்வதுண்டு. அது எப்போது உண்மை என பிறகு பார்க்கலாம்.ஆனால் பொதுவாகப் பார்த்தால் அப்படி இருக்க முடியாது தான்.ஏனென்றால் புற உலகின் ஆதிக்கம் நம்மை கட்டுப் படுத்து கிறது.அதனால் தான் இந்தப் புற உலகிலிருந்து தப்பிக்க  பல ஞானிகளும் முனிவர்களும் காடு மலைகளையோ, இமயமலைகளையோ நாடிச் சென்று தவம் இருந்தர்கள்!
முல்லா கதை ஒன்று உண்டு.முல்லா ஒரு நாள் தன் மனைவி ,கழுதை,மற்றும் தன் உடமைகளை ஒரு மூட்டையாக  எடுத்துக் கொண்டு வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது வழியில் பார்த்தவர்கள் ,ஏனைய்யா,கழுதை தான் இருக்கிறதே மூட்டையை கழுதை மேல் வைத்துக் கொண்டு செல்லலாம் அல்லவா?நீ ஏன் சுமக்கிறாய் என்று சொல்ல ,முல்லாவும் மூட்டையை கழுதை மேல் வைத்துக் கொண்டு செல்கிறார்.இன்னும் சிறிது தூரம் சென்றதும் வேறு சிலர் முல்லாவிடம் ,ஏனய்யா கழுதை மேல் தான் இன்னும் இடம் இருக்கிறதே ஏன் உன் மனைவியை நடக்க வைக்கிறாய் ?அவளையும் கழுதை மேல் ஏற்றி விடய்யா என்று  கூற முல்லாவும் அவ்வாறே செய்கிறார்.இன்னும் சிறிது  தூரம் சென்றதும் வேறு சிலர் ஏனய்யா கழுதையை வைத்துக் கொண்டு நடந்து செல்கிறாய்?நீயும் கழுதை மேல் ஏறி உட்கார வேண்டியது தானே என்று கேட்க முல்லாவும் ஏறி உட்கார்ந்து கொள்கிறார்.இப்போது முல்லா ,அவர் மனைவி ,மூட்டை என அனைத்தையும் கழுதை சுமக்க இன்னும் சிறிது தூரம் செல்ல ,வேறு சிலர் முல்லாவிடம் ஏனய்யா இந்த நோஞ்சான் கழுதை மேலே இவ்வளவு சுமையை  ஏற்றிச் செல்கிறாயே என வினவ இப்போது மீண்டும் பழைய படி முல்லாவும் கீழே இறங்கி மூட்டை மற்றும் மனைவியுடன் நடந்தே செல்ல ஆரம்பித்தார்!  இன்னும் சிறிது தூரம் சென்றதும் வழியில் பார்த்தவர்கள் ஏனய்யா இந்த நோஞ்சான் கழுதை யை இப்படி இவ்வளவு தூரம் நடத்தியே கூட்டி வருகிறாயே இது பாவம் இல்லையா?என்று கேட்க கடைசியில் முல்லாவும் அவர் மனைவியும்  சேர்ந்து ஒரு மூங்கிலில் அந்தக் கழுதையைக் கட்டித் தொங்கவிட்டு இருவரும் சேர்ந்து அதை தூக்கிக் கொண்டு செல்கிறார் கள்! இப்படிப் போகிறது அந்தக் கதை.
வெளி உலகம் சொல்வதெற்கெல்லாம் செவிசாய்த்தால் முடிவு இப்படித்தான் போகும் என்பதற்காகத் தான் இந்தக் கதை.  

 அப்படி யானால் புற உலகை சார்ந்து,மற்றவர்கள் கூறுவதை நாம் ஏற்றுக் கொண்டு வாழக் கூடாதா?என்றால் ,நமக்கு அமைதியும்,நிம்மதியும்,சந்தோஷமும் வேண்டும் என்றால் கண்டிப்பாக செவி சாய்க்கக்  கூடாது...ஒரு சில விதி விலக்குகளைத் தவிர.....!      

 இன்னும் அலசுவேன்......

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

கவியரசர் கண்ணதாசன்...!

..இது வரை நாம் எல்லோரும் கவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்  மூன்றாம் பிறை படத்தில் வந்த "கண்ணே கலைமானே "என்ற பாடல் தான் என்றே நினைத்து வந்தோம்.திரை உலகினர் கூட அந்தப் பாடலையே பிரதானமாக கூறிவருகின்றனர். ஆனால் கவியரசர் கண்ணதாசனால் எழுதப் பட்டு வெளியான கடைசிப் பாடல்  மதர் லேன்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளியான " உன்னை நான் சந்தித்தேன் "என்ற படத்தில் வரும் "தேவன் தந்த வீணை" என்ற பாடல் தான் என்பது  யாருக்கும் தெரியவில்லை!  அதில் கடைசி கடைசி யாக அவர் எழுதியிருக்கும் வரிகளைப் பாருங்கள்...
                
                    வானம் எந்தன் மாளிகை -வையம் எந்தன் மேடையே..        
                  வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள் ....
                   எங்கிருந்தேன் இங்கு வந்தேன்
                    இசையினிலே எனை மறந்தேன்...
                     இறைவன் சபையில்  கலை(வி)ஞன் நான்..!

 எப்படிப் பட்ட வைர வரிகள்.?இதுதான் கடைசிப்பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தே எழுதி இருப்பாரோ ?
         
கூடுதல் தகவல் ....மூன்றாம் பிறை( சாத்மா) வெளியானது 28 .08 .1983 
                                     உன்னை நான் சந்தித்தேன்  வெளியானது 17 .10 .1984 
(சென்சார் certificate இன் படி ) ----நன்றி  you tube !

வியாழன், அக்டோபர் 06, 2011

ஒரு அன்பான வேண்டுகோள் !

வலைப்  பதிவு நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.என்னுடைய இந்த  "நினைத்தாலே இனிக்கும் " வலைப் பதிவை பின் தொடர விரும்பும் அன்பர்கள் தற்போதைக்கு எனது மற்றொரு வலைப் பதிவான  " ragavmurali .blogspot .com " followers இல் இணையுமாறு வேண்டுகிறேன். google இன் folowers இப்போது பரிசோதனையில் இருப்பதால் , பிறகு" நினைத்தாலே இனிக்கும் " ப்ளாக் இல்  followers சேர்க்கப் படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செவ்வாய், அக்டோபர் 04, 2011

மனம்.....2 !

 மனதை  அடக்க வழி உண்டா...?                        

முதலில் மனதைப் பற்றி புரிந்துகொண்டால் அதனை அடக்கும் வழியினைக் கண்டு கொள்ளலாம்!

ஜென் என்ன சொல்கிறது மனதைப் பற்றி? 

ஜென் சொல்கிறது மனதினை ஒரு கோப்பை என்று. அதாவது ஒரு கோப்பையில் நாம் எதை வேண்டுமானாலும் போட்டு நிறைத்துக் கொள்ளலாம். அதே போல நாமும் நமது மனம் என்னும் கோப்பையில் பலவற்றை பலவாறாகப் போட்டு நிரப்பி வைத்து விடுகிறோம்!  

 இன்னும் விளக்கமாகச் சொல்ல  வேண்டுமானால்  நாம் முன் பின் அறிந்திராத ஒரு நபர். அவரை நமக்கு- நமது நண்பர் அறிமுகம் செய்து வைக்கிறார் என்று கொள்வோம். அப்போது முதல் நமது மனம் என்னும் கோப்பையில் அவரைப் பற்றிய நினைவுகளை நிரப்பி விடுகிறோம்.எப்படி?நமது நண்பர் அந்த புதியவரைப் பற்றி என்னவெல்லாம் சொன்னாரோ அப்படியே.

நமது நண்பர் அவரைப் பற்றி நல்ல விதமாகச் சொன்னால் அவரை நல்லவராகவும் வேறு ஏதாவது கெட்ட விதமாகச் சொன்னால் அவரை கெட்டவராகவும் நாம் நம் மனதில் உருவகம் செய்து விடுகிறோம். அது முதல் அவரை அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.  

எப்படி ஒரு கோப்பையில் டீயை ஊற்றி விட்டால் பிறகு அதில் காப்பியை யோ தண்ணீரையோ  ஊற்றமுடியாதோ அதே போல.

மீண்டும் அந்தக் கோப்பையில் காப்பி யையோ தண்ணீரையோ ஊற்ற வேண்டுமானால்  முதலில் அந்தக் கோப்பையை காலி செய்ய வேண்டும்.! 

அதே போல அந்த புதிய நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிய வேண்டுமானால் நமது நண்பர் ,அந்தப் புதியவரைப் பற்றிக் கூறியதை முதலில் தள்ளி வைக்க வேண்டும்.அதன் பிறகு நாம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

 இப்படி நாம் அவருடன் பழகிய பின்பு அவரைப் பற்றி எடை போட்டு அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு முடிவிற்கு வரவேண்டும்.சரி அவரைப் பற்றிய ஒரு முடிவிற்கு வந்துவிடோம். அவர் மிகவும் நல்லவர் என முடிவு செய்து விட்டோம்.
 இப்போது நமது மனம் என்னும் கோப்பையில் அவருக்கென்று உள்ள இடத்தில் அவரை நல்ல மனிதராக நிரப்பி விட்டோம்.இனி அவரை காணும் போதெல்லாம்  அவருடன் பேசும் போதெல்லாம்,அவருடன் பழகும் போதெல்லாம் அவரை மிகவும் நல்ல மனிதராகவே பார்க்கிறோம். 


 ஒரு நாள் அவர் நம் எதிர் பார்ப்புகளை மீறி நடந்து கொள்கிறார்..! ஐயோ அவரா இப்படி? நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை.இவருக்குப் பின் இப்படி ஒரு மனிதரா? என்று பலவாறாகப் புலம்புகிறோம்.அவரிடம் ஏமாந்து விட்டோமே என அழுகிறோம். ஏன் இப்படி நடக்கிறது?

இதற்குக் காரணம் நமது மனம் தான்! நமது மனதில் அவரை நல்லவராக உருவகம் செய்து விட்டோம். நாம் உருவகம் செய்ததற்கு மாறாக அவர் நடந்து கொள்ளும் போது நமது மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எப்படி காப்பி ஊற்றப் பட்டக் கோப்பையில் டீ யை ஊற்ற முடியாதோ அதே போல..!
  
எனவே ஏமாற்றம் அடைந்த மனம் பலவாறாகப் புலம்பு கிறது.

அப்படி என்றால் மனம் தரும் இம்மாதிரியான  துன்பங்களிலிருந்து  மீள வழியே இல்லையா?  உண்டு......!

ஓஷோ சொல்கிறார்...மனம் ஒரு கோப்பை என்றால் அதில் கண்டதையும்  போட்டு நீ நிரப்பி விடுகிறாய். பின்பு அதற்கு மாறாக நடக்கும் போது ஏமாற்றத்தினால் புலம்புகிறாய்.எனவே அந்தக் கோப்பையை நீ உடைத்து எரிந்து விடு.இப்போது உன்னிடம் மனம் என்ற ஒன்று இல்லை.அதில் எதையும் போட்டு உன்னால் நிரப்பவும் முடியாது............! !
  

 இன்னும் அலசுவேன்..........

 

வியாழன், செப்டம்பர் 29, 2011

மனம்..!

மனம்..!
ஒரு வினோதம் .அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் குழம்பிப் போவோம்!எவ்வளவுவிதமானஉணர்ச்சிகள்.? அன்பு, பாசம் உறவு,பகை,நட்பு,கோபம்,காதல்,காமம்,பழிவாங்கும்உணர்வு,பணிந்துபோகும்
நெளிவு,எதிர்த்துப்பேசும்துணிவு,ஆஸ்திகம்,நாத்திகம்,நயவஞ்சகம்,சூழ்ச்சி,
சண்டை,சமாதானம்,ஆசை,என வளர்ந்து கொண்டே போகும் அனைத்து எண்ணங்களுக்கும்,உணர்வுகளுக்கும்  ஆரம்பப் புள்ளி இந்த மனது தான் அல்லவா?
  
அதனால் தான் அனைத்து யோகிகளும், ஞானிகளும், ரிஷிகளும் மனதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்று கூறினார்கள். அவர்களாவது  கட்டுப் பாட்டிற்குள் மனதை வைத்திருந்தார்களா என்றால் இல்லை என்றுதான்கூறவேண்டும்!அவர்களுக்குவராதகோபமா,கொடுக்காதசாபமா?ஏன் அவர்களாலேயே கட்டுப் படுத்த முடியவில்லை?  ஒவ்வொரு உணர்சிகளுக்கும்,எண்ணங்களுக்கும் என்ன காரணம்?      

 ஒரு அழகான பெண்ணைப் பார்த்தால் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது!சிலரைப் பார்த்தால் நட்பு கொள்ளத்தோன்றுகிறது. சிலரைப் பார்த்தால் எரிச்சல் (காரணமே இல்லாமல்) வருகிறது. எனக்கு அழகாகத் தோன்றும் பெண் என் நண்பனுக்கு அழகாகத் தோன்றுவதில்லை.யார் கண்களில் கோளாறு? 

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால் அந்த ஆசைக்கே காரணம் இந்த மனம் தானே? 
ஆக,இந்த மனதினை அடக்கி நமது வழிக்குக் கொண்டு வந்து விட்டால் ....எல்லாதுன்பங்களில்இருந்தும்விடுதலை கிடைத்துவிடுமா?அப்படியென்றால் அதற்கு என்ன வழி?

இன்னும் அலசுவோம் ...!


செவ்வாய், செப்டம்பர் 27, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை...3

என்னைத்  தனியாக நிற்கச் சொன்னதும்  ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த அனைவரும் பேச்சை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தனர். எனக்கு என்னவோ போலிருந்தது.ஒரு ஓரமாகப் போய் நின்றேன்.புதியவர்களின் admission முடியப் போகும் நேரம்,கல்லூரியின் முதல்வர் உள்ளே வந்தார்.!
    
ஓரமாக தனியே நின்ற என்னைப் பார்த்த அவர், நீதான் முரளியா? என்றார்.முன் பின் தெரியாத என்னை அவர் சரியாகப் பெயர் சொல்லிக் கூப்பிட, எனக்கு மட்டும் அல்லாமல் அங்கிருந்த அனைவருக்கும், வியப்பும் ஆச்சர்யமும் உண்டானது.   நான் ஆம் என்று சொல்ல ,admission செய்துகொண்டிருந்தவர்களைப்  பார்த்து இந்தப் பையனுக்கு admission போட்டு விடுங்கள் என்றார்!  


அவர்கள் ,என் பெயர் பட்டியலில் இல்லாததைக் கூற  ,"ஆமாம், முரளியின் பெயர் இருக்காது." எனக் கூறி விட்டு மேலும் தொடர்ந்தார்."முரளி யின் பெயர் மெரிட் லிஸ்டிலேயே வந்திருக்க வேண்டும். ஒரு நாள் என்னவோ  திடீரென்று எனக்கு  admission னுக்கு தேர் வானவர்கள் பட்டியலையும் அவர்களின் தேர்வு மதிப்பெண்களையும் சரி பார்க்கத் தோன்றியது.அப்போது தான்  இந்த முரளி யின் பெயர் விடுபட்டுப் போனது தெரியவந்தது.ஆர்வமுடன் நுழைவுத் தேர்வு எழுதி பாஸான முரளிக்கு admission போடாதது உறுத்தலாக இருந்தது.அதனால் கடைசியாக கல்லூரிக் கோட்டாவில்  சேரவேண்டிய ஒரு அரசியல் புள்ளியின் சிபாரிசோடு வந்த மாணவன்  சேராததால் அந்த இடத்திற்கு முரளியைப் போடச்சொல்லிவிட்டேன். அதனால் தான்  பட்டியலில் முரளியின் பெயர் இல்லை" என்றார்.   
     
வழக்கமாக அவ்வளவு தீவிரமாக தேர்வானவர்களின் பட்டியலை யாரும் பார்க்க மாட்டார்கள்.அப்படியே பார்த்தாலும் மெரிட் லிஸ்ட் இன் மார்க்கினை வைத்து சரி பார்க்க மாட்டார்கள்.அப்படியே பார்த்தாலும் admission ஓடிக்கொண்டிருக்கிறது  இனி என்ன செய்ய?என விட்டு  விடுவார்கள்.இவைகளை எல்லாம் மீறி அவருக்கு ஏனோ ஒரு உறுத்தல் ஏற்பட்டு எனக்கும் எப்படியாவது சீட் தந்துவிட வேண்டும் என்று தோன்றி இருக்கிறது! இவையெல்லாம் எப்படி நடந்தது.....??

உங்களின் தீர்மானத்திற்கே  விட்டு விடுகிறேன்.

 ஆனால் ,அந்த ஒரே நாளில் என்னுடன் கல்லூரியில் சேர்ந்த எல்லாப் பிரிவு மாணவர்களுக்கும்-- ஏன், கல்லூரியின் முதல்வருக்கும் கூட இந்த முரளி பரிச்சயமானேன்!  பின்னாட்களில் ஒரு சிலர் என்னை "கோட்டா சீட் முரளி"-என்று கூடச்  செல்லமாகக்  கூப்பிடுவதுண்டு!     

     மீண்டும் வருவேன்..........






சனி, செப்டம்பர் 24, 2011

சிக்கு புக்கு !

"சிக்கு புக்கு"என்றொரு தமிழ் படம் பார்த்தேன்.என்ன ஒரு அருமையான நளினமான கதை. ஏனோ தானோ என- அதிக ஆர்வக்கோளாறு காரணமாக எடுத்துவிட் டார்கள் போல! எடிடிங் ,இசை, பாடல்கள், திரைக்கதை என அனைத்திலும் கோட்டை விட்டு விட்டார்கள்.ஏன் தலைப்பிலேயே கூட கோட்டை விட்டு விட்டார்கள்!

மெல்லிய நீரோடை போன்ற கதைக்கு" சிக்கு புக்கு"  என டைட்டில்.என்ன ரசனையோ?.டைட்டில் ஐப் பார்த்தாலே யாரும் உள்ளே போகப் பயப்படுவாகளே ஐயா!  

ஆர்யா ,ஸ்ரேயா இருவரின் நடிப்பும் வீணாகி விட்டது.காதலுக்கு மரியாதை,மௌன ராகம் போல க்ளைமாக்ஸ் இல் உருக்கி எடுத்திருக்க வேண்டாமா?
அப்பா ,மகன் இரண்டு ஆர்யாவையும் மிகச்சரியாக் திரைகதையில் காட்டி பார்ப்பவர்களை கலங்கடித்த்ருக்க வேண்டாமா?

ஒரே ஆறுதல் ஒளிப்பதிவு மட்டும் தான்.

வாரணம் ஆயிரம் படத்திற்கு நிகரான அற்புதமான கதை. கோட்டை விட்டு விட்டீர்களே புண்ணிய வான்களே.

ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்திருக்க வேண்டாமா? வெற்றிப் படம் தந்திருக்கக் கூடிய நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்களே. (ஏதோ ஆங்கிலப் படத்தின் தழுவலாமே?)

அடுத்த முறை நல்ல கதை கிடைத்தால் discussion க்கு என்னையும் கூப்பிடுங்கள்...!

புதன், செப்டம்பர் 21, 2011

கிடைக்காததும் கிடைக்கும்...!

நான் எழுதுகின்ற ஆன்மீக நம்பிக்கைகள் சிலருக்கு இப்படியெல்லாம் நடந்திருக்குமா?எல்லாம் கட்டுக் கதை என்று தோன்றும்.இது நாத்திகம் பேசுபவர்கள் போல. 
சிலருக்கு சாதாரணமாக நடந்ததை கடவுளின் மேல் ஏற்றிகூறுவதாகத் தோன்றும்.இது கடவுளை மேம்போக்காக வேண்டுபவர்கள் கட்சி. 

வேறு சிலரோ நமக்கும் இது போல அதிசயங்களை செய்ய மாட்டாரா நாம் வணங்கும் கடவுள்? எனத் தோன்றும்.இவர்கள் கடவுளை  நம்பிக்கையுடன் வணங்குபவர்கள். 
நானும்  கிட்டத்தட்ட இந்த மூன்று நிலைகளிலும் இருந்திருக்கிறேன்!
முத்து படத்தில் ரஜினியின் ஒரு வசனம்.
"கிடைக்கிறது கிடைககாம இருக்காது.கிடைக்காமல் இருப்பது  கிடைக்காது!.--
நாம் "இனி கிடைக்காது.இனி எதுவும் நடக்காது "என முடிவு  செய்கிறோமே அதைக்  கிடைக்க வைப்பதுதான் அந்தக் கடவுள்!
மனிதனை நோய்களிலிருந்து,மரணத்திலிருந்து காப்பாற்றும் கடைசி அறிவியல் பூர்வமான எல்லை டாக்டர்கள் தான்.ஆனால் அந்த டாக்டர்களும் ஆச்சர்யப் படும் அளவிற்கு  ,மனப்பூர்வமான ஆழ்ந்த பிரார்த்தனைகளுக்குப் பிறகு ஒருவர் மீண்டு வந்தால் அதுதான் கடவுளின் கருணை.(எம் .ஜி.ஆர், சமீபத்தில் ரஜினி- நமக்குத் தெரிந்த உதாரணம்)இது- நோய் மரணத்திற்கு மட்டுமல்ல ,நம்மை விட்டுக் கை மீறிப் போகும் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்து அதன் மூலம் நடக்காது என மற்றவர்களால் பார்க்கப் பட்ட விஷயம் நடந்துவிட்டால் ,கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவித்துப் பார்த்தவர்களால் மட்டுமே உணர முடியும்!
இதை பல முறை ஸ்ரீ ராகவேந்திரரின் கருணையினால் நான் அனுபவித்திருக்கிறேன்.  இதே போல ராகவா லாரன்ஸ்(முனி -பார்ட் 2  காஞ்சனா- லாரன்ஸ் தான்) கூட கூறியிருக்கிறார்!.....அது என்ன?அதைப் பிறகு பார்க்கலாம்.


மீண்டும் வருவேன்......                                 

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

திங்கள், செப்டம்பர் 19, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை...2..

                                         (அருள் பார்வை 1 ஐ ப்படித்து விட்டு மேலே வரவும் )
               
                                 மகான் ஸ்ரீ ராகவேந்திரரை சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் ராயர் என்றே அழைப்பார்களாம் .

ஸ்ரீ ராகவேந்திரருக்கு மிகவும் உகந்த வியாழக் கிழமை ,அவரின் கோவில் சென்று வணங்கிவிட்டு  வந்த என்னிடம் ,தபால் காரர் அந்த கடிதத்தைத் தந்தார்.ஆர்வம் ஏதுமின்றி அந்தக்  கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன்.

           ஆச்சர்யம்..!  திருச்சி R .E .C .இலிருந்து B .E .Admission கடிதம்!!
                        
      என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.கண்களில்  ஆனந்தக் கண்ணீர்!எல்லோரிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டி மிகவும் சந்தோஷப்  பட்டேன்.ஏனென்றால் இப்போது போல முன்பு தனியார் கல்லூரிகளெல்லாம் அவ்வளவாக கிடையாது.B.E.சீட் கிடைப்பதும், படிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல. அதுவும் திருச்சி ஆர்.ஈ.சி! இந்தியாவிலேயே மிகச்சிறந்த இன்ஜினியரிங் காலேஜ் வரிசையில்  மூன்றாவது இடம் அன்று.(இப்போது எப்படி?இபோதைய பெயர்-- N I T .?) 
காலேஜ் திறக்கும் நாளில், அன்றே காலையில்  சேரச்சொல்லி இருந்தது.
            காலேஜ் திறக்கும் அந்த நாளில்  மிகவும் ஆர்வத்துடன் காலேஜ் சென்றேன்..Administrative பிளாக் இன் பின்புறம் இருந்த ஆடிடோரியம் சென்று காத்திருக்கச் சொன்னார்கள்..அன்று காலேஜ்- ல் புதிதாக சேர்ந்த அனைத்துப் பிரிவு மாணவர்களும் வந்திருந்தார்கள்.நான் சிவில் இன்ஜினியரிங் பிரிவு.என்னுடன் கூட மற்ற பிரிவுகளிலும் கடைசி யாக சேர ஒரு இருபது  மாணவர்கள் போல  வந்திருந்தனர்

.புதியவர்கள் admission முடிந்ததும் காலேஜ் முதல்வர் வருவார் என்றும்,அனைவருக்கும் முதல் நாள் அறிமுக உரை நிகழ்த்துவார் என்றும்,மறுநாள் முதல் வகுப்புகள் ஆரம்பம் என்றும் கூறினார்கள்.

முன்பே சேர்ந்தவர்கள் எல்லோரும் ஆங்காங்கே குழுமி பேசிக் கொண்டிருக்க கடைசியாக admission லெட்டர் வந்தவர்கள் ஒவ்வொருவராக admission  ஆனார்கள்.என்முறை வந்த போது admission பட்டியலைப் பார்த்தவர்கள் பணம் வாங்காமல் என்னை ஒரு ஓரமாக நிற்கச் சொன்னார்கள்
       
        காரணம்... அவர்கள் கையிலிருந்த கடைசிப் பட்டியலில் என் பெயர் இல்லை... !

அற்புதங்கள் தொடரும்.........