இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மார்ச் 25, 2013

ஸ்ரீரங்கம்..எல்லக் கரையில் எம்பெருமான்...!

நேற்றைக்கு முதல் நாள் ஸ்ரீரெங்கநாதர் உறையூரில் நாச்சியார் தாயாருடன்  சேர்த்தி கண்டருளினார்.இன்று ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் எல்லக்கரை மண்டபம் எழுந்தருளினார்.நான் முன்பே ஒரு பதிவில் எழுதி இருந்த படி ஸ்ரீ ரெங்கநாதர் இந்த பங்குனித் தேர் திருவிழாவில் ஜீயபுரம்,உறையூர் மற்றும் எல்லக் கரை மண்டபம் என வெளி இடங்களுக்கு எழுந்தருளினார்.உறையூர் சென்று சேர்த்தி தரிசித்தேன்.இன்று எல்லக்கரையில் ஸ்ரீ ரெங்கநாதரை தரிசிக்கும் பேறு கிடைத்தது.சிறுவனாய் இருந்த போது வெள்ளித்திருமுத்தம் பெரிய வீட்டின் உபயத்திற்கு சென்று இருக்கிறேன்.அதன் பிறகு   என்றைக்கு  உபயம் எனத் தகவல்சரியாக எனக்குக்   கிடைக்காது.
அதனால்
 இந்த முறை நான், என்று வரும் எனக் காத்திருந்து தவறவிடாமல் சென்று தரிசித்தேன்.இந்த பேறு  கிடைக்க வைத்த அந்த
 அரங்கனின் தாழ் பணிந்து வணங்குகிறேன்.... அடுத்த முறை ஜீயபுரம்
 சென்று வரவும் அருள் புரிவார்  என நம்புகிறேன்....  
 

வியாழன், மார்ச் 14, 2013

பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளை சேருமடி....


இது பிறந்து இரண்டு மாதமே ஆன நாய்க்குட்டி.மிகவும் நோஞ்சானாக உடல்முழுவதும் காயங்களுடன் தோல் உரிந்து மிகவும் பலவீனமாக 
இருந்தது.இன்று காலை  எனது site டிற்குள் நுழைந்த வுடன் இந்தக் 
குட்டி நாயைப் பார்த்து மிகவும் மூட் அவுட் ஆனேன். உடனே கடையிலிருந்து அதற்கு ரொட்டி வாங்கிப் போட்டேன்.பிறகு அங்கு வேலை பார்பவர்களிடம் இதைப் பற்றி விசாரித்தேன். இந்த நாய்க்குட்டி பிறந்து ஒரே மாதத்தில் இதன் தாய் ஒரு ரோடு விபத்தில் அடிபட்டு இறந்து விட்டது என்றும்  இறந்து போன தாயின் அருகே இரண்டு குட்டி நாய்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்ததாகவும், பிறகு இரண்டு குட்டிகளையும் இங்கு எடுத்து வந்ததாகவும் கூறினார்கள்.

இதில் இன்னும் ஒரு சோகம் தாய் இறந்த ஏக்கத்தில்  இதன் சகோதர நாயும் உணவு ஏதும் உண்ணாமல் ஒரே வாரத்தில் இறந்து போய் விட்டதாகவும் கூறினார்கள்.
 
பிறவிப் பயன் பற்றியும் ,முன்ஜென்ம பாவம் பற்றியும்,பெற்றவர்கள் செய்த பாவங்கள் பிள்ளைகளைச் சேரும் என்பது பற்றியும் எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்த எனக்கு இந்த நாயின் பிறவியும் ,
நிலையும்  எதையோ உணர்த்துவது போல இருந்தது.பிறந்து இரண்டு மாதங்களே ஆன இந்த நாயின் இப்படிப்பட்ட நிலைக்கு என்ன காரணம் இருக்கமுடியும்.?அதற்கு பாவ புண்ணியங்கள் பற்றி என்ன தெரியும்? இந்த குட்டி நாய்க்கு ஏன் இந்த நிலை?மனது வலித்தது.
 
ஆனால் ஒரு ஆறுதல் எனக்கு முன்பே அதன் மீது கருணை  கொண்டு தினமும் பாலும் ரொட்டியும்கொடுத்து வளர்த்து வரும் அந்த தொழிலாளர்களை  நினைத்து பெருமைப் பட்டேன்.
இன்னும்  இறக்க குணம்உள்ளவர்களும் இருக்கிறார்களே என்று
சந்தோஷப் பட்டேன்.தன்னால் படைக்கப் பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் படி அளப்பான் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
 
இன்று இந்த நாய்க் குட்டி எனக்கு நிறைய உண்மைகளை விளங்க வைத்தது.

செவ்வாய், மார்ச் 12, 2013

ஸ்ரீரங்கம் -- மகேந்திர மங்களம்

மகேந்திர மங்களம் ஸ்ரீரங்கத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில்  முசிறியைத்   தாண்டி உள்ள ஒரு சிறிய கிராமம்.இங்கு பெரியவா சந்திர சேகரேந்திர சங்கராச்சாரியார் சுவாமிகள் இளம் வயதில் தங்கி இருந்து குருகுலம் பயின்ற பாடசாலை இருக்கிறது .அவர் தங்கியிருந்த, அவர் பாதம் பட்டமண்ணிற்கு  ,அவர் உண்டு உறங்கிய அந்த ,வீட்டிற்குச்  செல்லும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.எனது நண்பர் திரு ஸ்ரீதர் (ரயில்வே ) 
அவர்களின் மூலம் இதைத் தெரிந்து கொண்டு அவருடன் கடந்த ஞாயிறு அன்று அங்கு சென்று தரிசனம் செய்து, சிறிது நேரம் தியானம் செய்து விட்டு வந்தேன்.மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு உண்டானது.மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் பாட்டனார் திரு. சிங்கமையாங்கார் அவர்களுக்கு   உரிய இந்த வீட்டினையும் அதற்காக சில சொத்துக்களையும் அவர் இந்த பாட சாலையை நிர்வகிக்க தானமாக கொடுத்து விட்டதாக இந்த கல் வெட்டு கூறுகிறது.தற்போது ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதி யில் திரு சுஜாதா அவர்களின் பூர்வீக வீட்டிற்கு எதிரில் அமைந்துள்ள கு.சி.பாடசாலையின் நிர்வாகத்தின் கீழ் இது பராமரிக்கப் பட்டு வருவதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.
 




வாய்ப்பிருந்தால் நீங்களும் சென்று வரலாம்.இல்லை என்றால் இந்தப் படங்களைப் பார்த்து அந்த உணர்வினை நீங்களும் பெறலாம்.

வியாழன், மார்ச் 07, 2013

மனம் 12

மனதை நமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முதலில் 
நம்மை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் எண்ணங்களை விட்டு வெளியே முழுவதுமாக வரவேண்டும்.இதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளது.

ஒன்று அம்மாதிரி எண்ணங்களைக் கடந்து அவற்றில் நுழைந்து மனோ தைரியத்துடன் வெளி வருவது.

இரண்டாவது அந்த எண்ணங்களின் பக்கம் போகாமல் மனதினை வேறு பக்கம் செலுத்தி வேறு இடங்கள்,சூழ்நிலைகளுக்கு மாறி அதிலிருந்து மீண்டு வெளிவருவது.இதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப் படும்.ஏன் என்றால் நாம் எங்கே சென்றாலும் நாம் எண்ணங்கள் நம்முடனே தானே வரும்.? இதைத்தான் கவியரசர் "கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை"என்று எழுதினார் !

முதலாவது வழி ஓஷோ வின் கூற்றுப் படி எந்த நிகழ்வினையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும்.இன்பமா வரட்டும் .துன்பமா அதுவும் வந்து விட்டுப் போகட்டும்.எல்லாவற்றையும் கடந்து வருவோம்.வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு விடுவோம்.என்கின்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
மனோதத்துவத்தில் ஒரு வழிமுறை கூறுவார்கள்.அதாவது போபியா என்ற எதைப் பார்த்தாலும் பயம் கொள்ளும் ஒருவகை மனவியல் சார்ந்த நோய்.தெனாலி  படத்தில் கமலுக்கு வந்த மனநோய் போல. இதிலிருந்து வெளிவர  உளவியல் வல்லுனர்கள் கூறும் ஒரு வழி,எதில் உங்களுக்கு பயம் வருகிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக  நாம் செய்து பார்த்து அதை மனதிற்கு பழக்கப் படுத்தி  விடுவது.அதாவது சிலபேருக்கு விமானம் பறப்பதைப்  பார்க்குக்கும் போது பயஉணர்ச்சி தோன்றும்.சிலருக்கு உயரமான இடத்திலிருந்து கீழே பார்க்கும் போது பயம் வரும். இவர்கள் விமானம் பறப்பதை கொஞ்சம் கொஞ்சமாக   பார்த்து பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.நாளடைவில் மனம் இதற்கு பழக்கப் பட்டு பயம் மறையும்.இது போலத்தான்  உயரமான இடத்திலிருந்து கீழே பார்க்கும் போது வரும் பயத்தினையும்  கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப் படுத்தி அதிலிருந்து வெளிவர முடியும்.
 
ஆக மனதிற்கு பிடிக்காத அல்லது மனம் வெறுக்கும்,பயம் கொள்ளும் எந்த 
நிகழ்வினையும்கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தின் மூலம் 
 கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரலாம். 
இன்னும் வரும்....