இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஜூலை 10, 2012

ஸ்ரீரங்கம்....4 !

 வெள்ளித்திருமுத்தம்  பெரிய வீடுக்கும் எழுத்தாளர் சுஜாதா விற்கும் நெருங்கியதொடர்பு உண்டு .அவரது சகோதரர் அந்த வீட்டின் மாப்பிள்ளை..எனவே அந்தவீட்டில் நடக்கும் விஷேஷங்களுக்கு சுஜாதா அவர்கள் வருவதுண்டு.அப்படி ஒரு விசேஷத்திற்கு அவர் வந்த போது அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.விக்ரம் படத்தில் ஒரு ஷாட்   மிகுந்த பிரயத்தனப் பட்டு கமல் எடுத்ததை சிலாகித்துக் கூறினார்.ஒரு தூணின் மேல் புறா உட்காரும் காட்சி அது என நினைக்கிறேன். 

அப்போது அவரது தொடர்கதை " ஆதலினால் காதல் செய்வீர்""குமுதத்தில் முடிவுற்ற நேரம்..அதன் விமரிசனப் பகுதியில்  " கதை கூட்ஸ் வண்டி ஆங்காங்கே நின்று செல்வது போல சில இடங்களில் விறுவிறுப்  பாகவும் சில இடங்களில் மந்தமாகவும் இருந்தது " என நான் எழுதிய விமரிசனம் குமுதத்தில் வெளியாகி இருந்தது..அதை அவரிடம் காட்டினேன்..படித்துப் பாத்தவர் மெல்ல சிரித்தபடி ஓஹோ ,நீதான் ஸ்ரீரங்கம் A .S .முரளியா? உனது பெயரை நிறைய பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன் இன்னும் நிறைய எழுது என்றார்..

அவரது சகோதரர் திரு ராஜகோபாலன் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்..மிகவும் அற்புதமான மனிதர்.. அவரிடம் எந்த சப்ஜெக்ட் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்..அவரிடம் சரித்திரம் பற்றியோ ,ஸ்ரீரங்கம் கோவில் பற்றியோ ,புராணங்கள் பற்றியோ பேசிக் கொண்டே இருக்கலாம்..முன்பெல்லாம்  ஸ்ரீரங்கத்தில் நாம் இருந்தால் அவரிடம் மாலை வேளைகளில் பேசச் சென்றால்  பொழுதை இனிமையாகவும் பயனுள்ளதாகவும்  கழிக்கலாம் என நான் எண்ணியதுண்டு.ஆனால் சில பல காரணங்களால் இப்போது முடியவில்லை.இன்றும் மாலை வேலைகளில் அவர் ஸ்ரீரங்கத்தின் சித்திரை வீதிகளில்  நடை பயிற்சிக்கு வரும்போது அவரைப்  பார்த்து நலம் விசாரிப்பது உண்டு..

திரு ராஜகோபாலன் அவர்கள் மும்பயிலிருந்த நேரம் அது.. அவரது மகன்கள் மாது  மற்றும் அரவிந்தன் இருவரும் ஸ்ரீரங்கத்திற்கு  விடுமுறைக்கு  வந்து விட்டார்கள் என்றால் எங்கள்  வீதி  மேலும் களை  கட்டி விடும்.! தினம் ஏதாவது  ஒரு வீதியுடன் தெரு கிரிக்கெட் மேட்ச் வைத்து விட வேண்டும் அவர்களுக்கு !....தெருவில்  மூன்று சவுக்குக் குச்சிகளை நட்டு கிரிக்கெட் மேட்ச் விளையாட ஆரம்பித்து விடுவோம்..மிகவும் சீரியஸ் ஆன மேட்ச் ஆக அது  இருக்கும்.....!

 அந்த நினைவுகளை 

நினைத்தாலே இனிக்கும்....!

இன்னும் வரும்..... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக